நான் முட்டாபய.. எனக்கு ஓபிசி பத்தி தெரியல! ஏய்.. போடா! செய்தியாளரை ஒருமையில் அதட்டிய சீமான்
சென்னை: OBC இடஒதுக்கீடு பிரிவு குறித்து விளக்கம் கேட்ட செய்தியாளரிடம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உசிலம்பட்டி கூட்டத்தில் OBC க்கு பிழையான விரிவாக்கத்தை சீமான் வழங்கிய நிலையில் இன்று அதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளார் செய்தியாளர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையாதேவரின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய சீமான், "நான் ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவேன். மத்திய அரசு எங்கு இருக்கிறது என்று கேட்பேன். ஏய், போப்பா அங்கிட்டு என்பேன்.

நான் இங்கு இருக்கிற ரெட்டியாருக்கு கொடுப்பேன். தெலுங்கு செட்டியாருக்கு கொடுப்பேன். கன்னட செட்டியாருக்கு கொடுப்பேன். நாயுடுவுக்கும் கொடுப்பேன். எல்லோருக்கும் கொடுப்பேன். ஆனால், ஆந்திரா போவேன். கர்நாடகா போவேன். இங்கு இருக்கிற கன்னடர்களுக்கு நான் கொடுத்து இருக்கிறேன். இங்கே ஒன்றே கால் கோடி தமிழன் இருக்கிறான். அவனை நீங்கள் ஓபிசியில் வைத்து உள்ளீர்கள்.
Out of Backward என்று வைத்து உள்ளார்கள். அது இல்லாமல் என்னையும் சேர்த்துக்கொண்டு நான் அங்கு இடஒதுக்கீடு வழங்கியதைபோல் நீயும் கொடு என்று சொல்வேன்." என்றார். இடஒதுக்கீட்டிற்காக மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பிரிவுகளில் ஒன்றுதான் ஓபிசி. ஓபிசி என்றால் Out of Backward என்று சீமான் உசிலம்பட்டி கூட்டத்தில் பேசி உள்ளார். ஆனால், அதன் சரியான விரிவாக்கம் என்பது Other Backward class என்பதே.
இந்த நிலையில், சென்னை மெரியா லூப் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், "ஓபிசி என்றால் OUT OF BACKWARD CLASS என்று தவறான புரிதலில் பேசி உள்ளீர்கள்." என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிசி என்றால் என்னவென்று நீ சொல் என சீமான் திருப்பி கேட்டார். உடனே செய்தியாளர் OTHER BACKWARD CLASS என்று பதிலளித்தார்.
உடனே சீமான், "OTHER BACKWARD CASTE சரி, எனக்கு தெரியல. நீ ரொம்ப படிச்சிருக்க. நான் முட்டாள்பய. பிற்படுத்தப்பட்டோருக்கு என்ன கொடுத்த கர்நாடகாவில். ஒன்றேகால் கோடி நான் இருக்கேன். ஆந்திராவில் எவ்வளவு இருக்கிறேன்? மகாராஷ்டிராவில் 26 லட்சம் உள்ளேன். என்ன கொடுத்தாய்?" என்று கேட்டார்.

உடனே அந்த செய்தியாளர், "BACKWARD CASTE என்றாலே பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டோர்தானே." என்று செய்தியாளர் சொல்ல, ஆவேசமடைந்த சீமான், "ஏய் அவன் எவனாவும் இரு. எனக்கு என்ன இடம். தம்பி.. இங்க பாரு.. இங்க கன்னடருக்கு இடஒதுக்கீடு இருக்கிறதா இல்லையா? தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லை? நீ கேட்பதற்கு நான் பதில் சொல்கிறேன்.
நான் கேட்பதற்கு நீ செல்லுவியா மாட்டியா? ஏய்.. நான் கேட்பதற்கு பதில் சொல்" என்று சீமான் சொன்னார். உடனே அந்த செய்தியாளர், ஏய் என்று சொன்னதற்கு அதிருப்தி தெரிவித்தார். உடனே சீமான், "ஏய் என்று சொல்லாமல் ஓய் என்று சொல்லவா? போடா.." என்று ஆவேசமாக ஒருமையில் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பத்திரிகையாளர்களை தொடர்ந்து ஒருமையில் மரியாதைக் குறைவாக சீமான் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications