விஜயை சீமான் எதிர்க்க இதுதான் காரணம்.. அஜித், எஸ்கேவுக்கும் கூட்டம் வரும்! இடும்பை கார்த்திக் சுளீர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் ரசிகர்களுக்கு, தளபதி, டிவிகே என்பதை தவிர வேறு எதுவும் தெரியாத மாதிரி இருக்கிறார்கள் எனவும், அஜித், சிவகார்த்திகேயன் என யார் கூப்பிட்டாலும் கூட்டம் வரும், வெறும் திரை கவர்ச்சியை வைத்து மட்டும் அரசியல் செய்துவிட முடியாது என நாம் தமிழர் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் நேரடியாகவும் மறைமுகமாகவும் சில தலைவர்களை விமர்சித்து பேசினார்.
இதை அடுத்து திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் விஜயை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

விஜய் அரசியல்
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒன்இந்தியா தமிழ் அரசியலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த அவர்," விஜய்யை குறி வைத்து பத்திரிகைகள் ஒரு கருத்து உருவாக்கம் செய்கிறார்கள். இது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இடும்பாவனம் கார்த்திக்
விஜயிடம் 20% 30% வாக்குகள் இருக்கிறது என்பது கற்பனை வாதம். இது பல பத்திரியாளர்களின் விருப்பமாக இருக்கிறது என்பது தான் உண்மை. ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி விஜய் குறித்து நான்கு நாட்கள் விவாதம் நடத்த வேண்டிய அவசியம் என்ன. பணம் பெற்றுக் கொண்டு தான் இவ்வளவையும் செய்கிறார்கள். ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு திமுக, பாஜக பிடிக்கவில்லை என்றால் அவர்கள் நாம் தமிழரை எதிர்க்கிறார்கள். அதற்காக விஜயை ஆதரிக்கிறார்கள். ஆனால், கள எதார்த்தம் என்பதை உணர வேண்டும்.
சினிமா கவர்ச்சி
விஜய் மட்டுமல்ல அஜித் அழைத்தாலும் சிவகார்த்திகேயன் அழைத்தாலும் கூட்டம் வரும். இதற்கு முன்னர் கட்சி ஆரம்பித்த டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் போன்றவர்கள் என்ன ஆனார்கள். விஜய் கட்சி ஆரம்பித்த பின் பல தேர்தல்களை புறக்கணித்தார். அப்படி என்றால் அந்த தேர்தல் விஜய் ஆதரவு வாக்குகள் என்னவானது. வெறும் சினிமா கவர்ச்சியை மட்டுமே வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்புவதை ஏற்க முடியாது. அதனால்தான் முதலில் விஜய் ஆதரித்த சீமான் தற்போது எதிர்க்கிறார்.
விஜய் அரசியல்
எந்த விஷயங்களுக்கு விஜய் முதலில் குரல் கொடுத்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். தூய்மை பணியாளர்களை தனது அலுவலகத்திற்கு வரவைத்து பார்ப்பது தான் அரசியலா? கேரளாவில் முல்லைப் பெரியாறு விவகாரம், கர்நாடகாவில் காவிரி விவகாரம் என எந்த விவகாரத்திற்கு விஜய் குரல் கொடுத்திருக்க வேண்டும். கேரளா கர்நாடக பிரச்சினைகளில் குரல் கொடுத்தால் தன் படம் அங்கெல்லாம் ஓடாது என முக்கிய பிரச்சினைகளை விஜய் தவிர்த்து வருகிறார்.
தளபதி ரசிகர்கள்
விஜயை பொறுத்தவரை அரசியலற்ற கூட்டம். கொள்கை இல்லாமல் வெறும் தளபதி தளபதி என்ற முழக்கம் மட்டுமே இருக்கிறது. விஜய் சடங்கு அரசியல் செய்கிறார். அதனால் தான் சீமான் விஜயை எதிர்க்கிறார். இதில் தனிப்பட்ட எந்த விவகாரமும் கிடையாது" என கூறியிருக்கிறார். இடும்பாவனம் கார்த்தியின் முழு பேட்டியை இந்த ஒன் இந்தியா அரசியல் சேனலில் காணலாம்.












Click it and Unblock the Notifications