சசிகலாவை அதிமுகவில் இணைப்பீர்களா?.. அன்று அய்யோ சாமினு பதறிய ஓபிஎஸ்.. இன்று சொன்ன பதில் என்ன?
சென்னை: அதிமுகவில் மீண்டும் சசிகலா இணைக்கப்படுவாரா என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாகவே தெரிகிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 150-க்கும் மேற்பட்ட பலதரப்பட்டவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்திவிட்டது. 7 முறை சம்மன் அனுப்பியும் தனிப்பட்ட மற்றும் பட்ஜெட் காரணங்களால் ஓபிஎஸ் ஆஜராகவில்லை.

சர்க்கரை நோய்
இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் ஆஜரானார். அப்போது அவர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருப்பது மட்டுமே தெரியும் என்றும் அவருக்கு இருந்த மற்ற உடல் உபாதைகள் குறித்து தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்த பிறகு அவரை பார்க்கவே இல்லை என்றார்.

சசிகலா சதி செய்யவில்லை
இந்த நிலையில் நேற்றைய தினம் பன்னீர் செல்வம் மீண்டும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகினார். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த சதி திட்டமும் தீட்டவில்லை என தெரிவித்தார். மேலும் சசிகலா மீது இன்று வரை தனிப்பட்ட முறையில் தனக்கு மரியாதையும் அபிமானமும் இருப்பதாக தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை
அது போல் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் பொதுமக்களின் சந்தேகத்தை போக்குவதற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கச் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது.

சின்னம்மா
அதற்கு அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என பதில் அளித்திருந்தார். அது போல் ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் ஆணையத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டார். கடந்த மார்ச் 7ஆம் தேதி சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அய்யோ சாமி.. வேண்டாம் என கூறி விமான நிலையத்திற்குள் அவசர அவசரமாக சென்றுவிட்டார்.












Click it and Unblock the Notifications