ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யார்? இன்று மாலை முக்கிய ஆலோசனை!
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும், இடைத்தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் இறுதி செய்யப்படும் என்று பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவித்த நாள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தமாகாவிற்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளரை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கு போட்டியாக ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு தரப்பிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதில் நிர்வாகிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
முட்டும் இபிஎஸ்..மோதும் ஓபிஎஸ்! ஆதரவு யாருக்கு? ’மேல’ இருக்கவங்க பாத்துப்பாங்க..அண்ணாமலை சொன்ன பதில்
குஜராத் சென்ற ஓபிஎஸ்
அதேபோல் இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருக்கிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் விருப்ப மனு விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ் சங்கம் சார்பாக பொங்கல் விழா நடைபெற்றது.
ஓபிஎஸ் பேச்சு
இந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று பொங்கல் விழாவில் கலந்துகொள்ள ஓ பன்னீர்செல்வம் நேற்று அகமதாபாத் சென்று இருந்தார். அங்கு விழாவில் கலந்துகொண்டு ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு குஜராத் வாழ் தமிழர்கள் தான் உதாரணம் என்று தெரிவித்தார்.
மாலை ஆலோசனை
இதனையடுத்து பொங்கல் விழா நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்திய பின்பு மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.
வேட்பாளர் யார்?
ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றியும், கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.