உள்ளே மீட்டிங்.. வெளியே அதிமுக அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் பேனர்.. ஆதரவாளர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பேனரில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரின் பெயரும் இல்லாமல் முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிா்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு அதிமுக நிா்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2 மணி நேரத்திற்கு மேலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
அமாவாசைக்கு காத்திருந்த ஓபிஎஸ்.. முந்திய எடப்பாடி 'போச்சே’ அதே இடத்தில் போட்டி கூட்டம்- பரபர பிளான்!
இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள பேனரில் ஓ. பன்னீர் செல்வத்தின் புகைப்படம் இபிஎஸ் ஆதரவாளர்களால் கிழிக்கப்பட்டது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியின் வருகையின் போது அதிமுக பொதுச்செயலாளரே என்றும், ஒற்றைத் தலைமையே என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஓபிஎஸ்-க்கு எதிராக நிர்வாகிகள் நேரடியாக பேசி வந்த நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில், ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
Recommended Video
அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பேனரை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். உட்கட்சி பூசல் முற்றி, முக்கியத் தலைவராக செயல்பட்டு வந்தவரின் புகைப்படம் கிழிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.