ஒரு பக்கம் ரஜினி.. இன்னொரு பக்கம் சசிகலா.. நடுவில் "ஸ்டண்ட்" செய்யும் ஓபிஎஸ்? டென்ஷனில் அதிமுக!
ரஜினிக்கு முந்திக் கொண்டு வாழ்த்து சொல்லி உள்ளார் துணை முதல்வர் ஓபிஎஸ்
சென்னை: ரஜினிக்கு முதல் ஆளாக வந்து வாழ்த்து சொல்லி இபிஎஸ் தரப்பை அப்செட்டாக்கியுள்ளார் ஓபிஎஸ் என்று சொல்கிறார்கள்.
இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்.. வழக்கமாக பிறந்த நாள் அன்று கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து சொல்வது வழக்கம். ஆனால், ஓபிஎஸ் நேத்து ராத்திரியே முதல் ஆளாக முந்தி கொண்டு வந்து ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதான் அதிமுக வட்டாரத்தையே அசைத்து வருகிறது.
இத்தனை வருட பிறந்த நாளுக்கும் இப்படி ஒரு வாழ்த்து, முந்தையதினம் சொல்லாத நிலையில், அதுவும் மாற்றுக் கட்சியை ஆரம்பிக்கப் போகும் ஒருவருக்கு, இப்போது மட்டும் ஏன் ஓபிஎஸ் வாழ்த்து சொல்கிறார்? என்பதே மற்றொரு சந்தேகம்.
அதிமுக
கட்சி ஆரம்பிக்க போவதாக ரஜினி அன்று அறிவித்த தினத்தன்றும், ஓபிஎஸ்தான் அரசியல் கட்சி தலைவராக முதலில் கருத்து சொன்னார்.. அவர் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்பதாகவும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கும் என்றும், ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறினார். ஓபிஎஸ்ஸின் இந்த கருத்து அதிமுக தலைமைக்கே அதிர்ச்சியை தந்தது.
ஜெயக்குமார்
இதையடுத்து, செய்தியாளர்களும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதை பற்றி கேட்டனர்.. அதற்கு அவர், "ஓபிஎஸ்ஸின் கருத்து அவரது சொந்த கருத்து.." என்றார். இதற்கு பிறகு இதே கேள்வியை சிவகங்கையில் முதல்வர் எடப்பாடியாரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்... அதற்கு அவர், ரஜினி முதலில் கட்சியை பதிவு செய்யட்டும்... அதுக்கப்புறம் கேளுங்கள்... இப்போதைக்கு அறிவிப்பு மட்டும்தான் வந்துள்ளது.. ஓபிஎஸ் அவரது கருத்தை சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது'' என்றார்.
துணை முதல்வர்
ரஜினியின் கட்சி அறிவிப்பு விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், மூத்த அமைச்சரின் கருத்துகள் இப்படி மாறுபட்ட கருத்து ஒரே நாளில் அன்றைய தினம் எழுந்தது. இப்படி அதிமுக தரப்பில், பொதுப்படையான கருத்தை சொல்லி விட்டாலும், ஓபிஎஸ் அவ்வாறு சொன்னது சற்று அதிருப்தியைதான் உண்டு பண்ணியதாம்.
சலசலப்பு
டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு ஓபிஎஸ் வந்தபோதுகூட அவருடன் சில அமைச்சர்களுடம் பேச தயங்கி ஒதுங்கினராம்.. புரேவி புயல் ஆய்வுக்கு வந்த முதல்வரிடம் சில அமைச்சர்கள், "ஓபிஎஸ்ஐ கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுங்கண்ணே... தேவையில்லாத விஷயங்களை பேசி சலசலப்பை ஏற்படுத்துறாரு...அவரே ஒற்றுமையை குலைக்குறாரு" என்றார்களாம்.
சலசலப்பு
தனிப்பட்ட கருத்தை சொல்ல ஒருவருக்கு உரிமை இருந்தாலும், இந்த அளவுக்கு புகைய என்ன காரணம்? இப்போதுதான் இரட்டை தலைமை, முதல்வர் வேட்பாளர் என்ற பஞ்சாயத்து எல்லாம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், மறுபடியும் ரஜினி விவகாரத்தில் எதற்காக இந்த உரசல்? ஓபிஎஸ் ஏன் இப்படி பேசி வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழ ஆரம்பித்தன.
எடப்பாடியார்
விஷயம் இதுதானாம்.. மாவட்டவாரியாக, ஒரு தொகுதிக்கு 3 பேர் வீதம் வேட்பாளர்களை லிஸ்ட் போடும் பணிகள் அதிமுகவில் தொடங்கியிருக்கிறதாம்.. இந்த லிஸ்ட்டில் தனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பதற்காகவே ரஜினி விவகாரத்தை ஓபிஎஸ் கையில் எடுத்ததாக சொல்கிறார்கள்.. இதை அறிந்த எடப்பாடியார் தரப்பும், மாவட்டங்களில் அதிருப்தியில் உள்ளவர்கள் யார் என்று பார்த்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி வருகிறது.
வாழ்த்து
இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்றைய தினம் மறுபடியும் ஓபிஎஸ் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி உள்ளார்.. பொதுவான வாழ்த்தாக இருந்தால், இன்றைய தினமே சொல்லி இருப்பார்.. ஆனால், நேற்றே வாழ்த்தை சொல்லி மறுபடியும் ஓபிஎஸ் நெருப்பை பெற்ற வைத்துள்ளார்.. அதுதான் இப்போது அதிமுக கூடாரத்தையே புகைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
சசிகலா
சில நாட்களுக்கு முன்பு, ஓபிஎஸ் பேசும்போது, "ஆண் இரண்டரை வருஷமும், பெண் இரண்டரை வருஷமும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும்" என்றார். சசிகலா விடுதலை ஆகும் சமயத்தில் ஓபிஎஸ் ஏன் இப்படி பேசுகிறார் என்ற ஆச்சரியங்கள் அப்போதே எழுந்தன.ஒருவேளை இரண்டரை வருஷம் சசிகலாவை ஆட்சி செய்ய அனுமதிக்கும் யோசனையாக இருக்குமோ என்று சலசலக்கப்பட்டாலும், இது எடப்பாடியாரை சீண்டும் பேச்சாகவே பார்க்கப்பட்டது.