ஹைகோர்ட்டில் அனல் பறந்த ஓபிஎஸ் வாதம்! நீதிமன்றம் தலையிட கூடாது எனில் நடத்துவது கட்சியா? கிளப்பா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்தது.
சென்னை: அதிமுக எனும் கட்சியின் உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எனில் எடப்பாடி பழனிசாமி நடத்துவது கிளப் அல்லது சங்கமா? என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடைபெற்றது. அப்பொதுக்குழுவில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் நடைபெற்றது. பின்னர் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் சட்டப்படி செல்லும் என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அனுமதி வழங்கியது. இதனடிப்படையில் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எடப்பாடி பழனிசாமி நடத்துவதாக அறிவித்தது. இதற்காக வேட்புமனுக்களும் பெறப்பட்டன. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் முறையிட்டனர். இதனை ஞாயிற்றுக்கிழமையன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்; முடிவுகளை மட்டும் அறிவிக்க தடை விதிப்பதாக தெரிவித்தது. அத்துடன் ஏப்ரல் 11-ந் தேதி ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மான வழக்கு விசாரணை மார்ச் 22-ந் தேதி முதல் நடைபெறும்; மார்ச் 24-ல் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ்-ம் வழக்கு தொடர்ந்தார்.
இதனடிப்படையில் இன்று காலை அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ளவரை அடிபடை உறுப்பினராக இருப்பவரை நீக்குவது போல் நீக்கியது எப்படி சரியகும்? 1977-ம் ஆண்டு கட்சியில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரிடம் விளக்கம் கேட்காமல் எப்படி நீக்கலாம்? என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இபிஎஸ் தரப்பின் மிக முக்கியமான வாதமான உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்பதை கையில் எடுத்தார் ஓபிஎஸ் வக்கீல். இதனை சுட்டிக்காட்டிய அவர், உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்கிறது இபிஎஸ் தரப்பு. அப்படி எனில் இபிஎஸ் தரப்பு நடத்துவது கட்சி இல்லை எனில் கிளப் அல்லது சங்கமா? எனவும் கேள்வி கேட்டார்.












Click it and Unblock the Notifications