இன்று சொந்த ஊர் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்! மதுரை டூ பெரியகுளம்! வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் கிடைத்த தீர்ப்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு செல்கிறார்.
Recommended Video
சென்னையிலிருந்து மதுரை வரை விமானம் மூலம் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் பெரியகுளம் செல்லவுள்ளார்.
இந்நிலையில் மதுரையிலிருந்து பெரியகுளம் வரை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஓபிஎஸ் வசமான அதிமுக.. அலுவலக சாவி யாருக்கு?.. பன்னீர் வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த உற்சாகமாக காணப்படுகிறார். தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சி பொங்க பேசி அவர்களை அனுப்பி வைக்கிறார். இந்நிலையில் இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் செல்லும் அவர் அங்கு மூன்று நாட்கள் இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பண்ணை வீடு
மூன்று நாட்களுமே பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் தீவிர டிஸ்கஷன் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மதுரையிலிருந்து பெரியகுளம் வரை மிக உற்சாக வரவேற்பு கொடுக்க அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுப்பேற்றும் வகையில் இதற்கான ஏற்பாடுகளை ரவீந்திரநாத்தும், ஜெயபிரதீப்பும் முன் நின்று கவனித்திருக்கின்றனர்.
நேற்று ஆலோசனை
இதனிடையே நேற்று வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும், அதை எப்படி முறியடிப்பது என்பது பற்றி மிகத் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக என்னவெல்லாம் செய்வார் என்பதை அவருக்கு விளக்கிக் கூறிய வழக்கறிஞர் டீம், அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என நம்பிக்கை அளித்திருக்கிறது.
குலதெய்வம் கோவில்
நாம் ஏற்கனவே கூறியிருந்ததை போல் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே செண்பகத்தோப்பில் உள்ள தனது குலத் தெய்வக் கோவிலான வனப்பேச்சியம்மன் கோவிலுக்கும் ஓ.பி.எஸ். செல்லவிருக்கிறார். தென் மாவட்டங்களை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் பலரும் பெரியகுளம் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.