மீண்டும் என்டிஏவுக்கு வருகிறாரா ஓபிஎஸ்? டெல்லியில் அமித்ஷா உடன் சந்திப்பு.. பேசியது என்ன?
சென்னை: டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் பற்றி பேசியதாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். சென்னை விமான நிலையம் வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். இதனால் அவர் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு செல்ல இருக்கிறாரா? என்ற யூகமும் பரவி வருகிறது.
டெல்லி தலைமை அழைத்ததின் பேரிலேயே ஓ பன்னீர் செல்வம் சென்றதாகவும், ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றதாகவும் தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர் செல்வம் பேசியதை பார்க்கலாம்.

என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகல்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேர்ந்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இதில் பெரும் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறினார். தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு இருந்த நிலையில் அதற்கு அவர் அனுமதி தராததால் அப்செட் ஆன ஓ பன்னீர் செல்வம் என்.டி.ஏவில் இருந்து விலகினார்.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? அல்லது விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்ததால், அடுத்ததாக ஓபிஎஸ்சின் அரசியல் நகர்வு கவனிக்கப்பட்டது.
திடீரென டெல்லி பயணம்
இதற்கிடையே கடந்த 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுக தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம். அதற்குள் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என்று கூறியிருந்தார்.
இதனால் ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சி தொடங்க உள்ளாரா? என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. இந்த நிலையில் தான் நேற்று திடீரென ஓ பன்னீர் செல்வம் டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லி தலைமை அழைத்ததின் பேரிலேயே அவர் அங்கு சென்றதாகவும் தகவல் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றிருந்ததாகவும் தகவல் வெளியானது. அவர் மூலமாக இந்த டெல்லி பயணத்தின் போது ஓ பன்னீர் செல்வம் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க கூடும் என்றும் பேசப்பட்டது.
அமித்ஷாவுடன் அரசியல் பேசினேன்
இதற்கிடையே இன்று இரவு ஓ பன்னீர் செல்வம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறினார். மேலும் அமித்ஷாவுடன் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாகவும் கூறினார்.
என்.டி.ஏவில் இணைகிறாரா?
தேவைப்படும்போது அமித் ஷாவிடம் அரசியலும் பேசுவோம் என்றார். செங்கோட்டையன் பற்றி கேட்டதற்கு செங்கோட்டையன் எங்களை விட்டு போய்விட்டார். அவரை பற்றி பேச ஒன்றுமில்லை. என்று கூறினார். அமித் ஷாவை சந்தித்து இருப்பதன் மூலம் மீண்டும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ள நிலையில் அமித்ஷாவுடன் ஆன ஓபிஎஸ் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓபிஎஸ் கூறினாலும், இந்த சந்திப்பின்போது கூட்டணி விஷயங்கள் உள்பட பல்வேறு விஷயங்களில் பேசப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications