Vaiko Vs OPS : நான் பதிலடி கொடுத்தால் வைகோ மனம் புண்படும்! ஓபிஎஸ் அதிரடி
சென்னை: 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரத்தில் ஓபிஎஸ் தவறு செய்துவிட்டார் என்றும், அதற்காகத்தான் இன்று அவர் அனுபவிக்கிறார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டிற்கு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் நேற்றைய தினம் சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றி இருக்கிறேன். அவர் என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டுமே பேசி வந்திருக்கிறேன்.

இது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அண்ணன் வைகோ மீது மிகுந்த மரியாதை, அன்பு, பாசம், பற்றை இன்றைக்கும் வைத்திருக்கிறேன். எனவே அவர் என்ன பேசினாலும் அவர் மீது மரியாதையோடு இருப்பேன். நான் அவருக்கு பதிலை சொன்னால் அவருடைய மனதை புண்படுத்தும் என்பதால் அரசியல் நாகரீகம் கருதி நான் அந்த பிரச்சினைக்கு உள்ளே செல்ல விரும்பவில்லை.
2011 ஆம் ஆண்டு நடந்த பேச்சை 14 ஆண்டுகள் கழித்து இப்போது பேச வேண்டிய நிலை அண்ணன் வைகோவுக்கு ஏன் வந்தது என தெரியவில்லை. இந்த விவகாரம் குறித்து நான் பதில் சொல்ல வேண்டும் என அவர் விரும்பினால் அதற்கான பதிலை சொல்வேன். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அது போல் ஓபிஎஸ் பேசுகையில், செங்கோட்டையன் உள்ளிட்ட என் போன்ற நிர்வாகிகள் அதிமுக என்ற மாபெரும் இயக்கம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்ற அதிமுகவில் இருக்கும் 2 கோடி தொண்டர்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒன்றுபட வேண்டும் என நாட்டின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக மேல்பட்ட தலைவர்கள் எல்லாம் விரும்புகிறார்கள். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் விருப்பு, வெறுப்பு இந்த இயக்கம் ஒன்றுபடுவதற்கு தடையாக இருக்கிறது. அவர் எதை அள்ளிக் கொண்டு செல்ல போகிறார்? என்று தெரியவில்லை. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் நாங்கள் உறுதியாக வெல்வோம். அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் எங்களிடம் நல்ல எண்ணத்துடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுக் குழு கூட்டத்தில் ஓபிஎஸ் குறித்து வைகோ பேசுகையில், வைகோ பேசுகையில், கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளர் அனுப்பிவைத்த குழுவில் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் போன்றோர் இருந்தனர். அவர்களிடம் கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டேன்.
12 சீட்தான் என்றார்கள். இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது, இதற்கு உடன்பட முடியாது.. இதைவிட அதிகமான சீட்களை கொடுக்க உங்கள் பொதுச் செயலாளர் ஒப்புக்கொண்டால், கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன்.
அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓபிஎஸ். ஆனால், அதிமுக பொதுச்செயலாளரிடம் சென்று 'அவர் நம் கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் முறித்துவிட்டார்' என்று பொய்யைச் சொல்லிவிட்டார்.
பின்னர்தான் நான் கேள்விப்பட்டேன், மதிமுகவுக்கு ஜெயலலிதா 15 சட்டசபை தொகுதியையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுப்பதாக முடிவெடுத்திருந்தார் என்று! இதனால் ஓபிஎஸ் என்னை அழைப்பார் என நினைத்து செல்போனை கையிலேயே வைத்திருந்தேன். அவர் கூப்பிடவே இல்லை. அதன் பலனை இன்று ஓபிஎஸ் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications