5 டாகுமெண்ட்.. அவமதிப்பு.. சூழ்ச்சி - எடப்பாடிக்கு எதிராக பக்காவாக காய்நகர்த்திய ஓபிஎஸ்.. என்னாகும்?
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமையையைக் கைப்பற்றும் போட்டியில் முன்னிலை வகித்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முக்கிய காய்நகர்த்தல்களைச் செய்து முடித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு, நேற்று நடந்த தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம், ஜூலை 11ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் என எதுவுமே செல்லாது என தேர்தல் ஆணையத்துக்கு விரிவான கடிதத்தை அளித்துள்ளார் ஓ.பிஎஸ்.
பொருளாளரான தன்னை பொதுக்குழுவில் கணக்கு தாக்கல் செய்யக்கூட அனுமதிக்கவில்லை, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சட்டவிரோதமாக பொதுக்குழுவில் நுழைந்து பிரச்சனையை ஏற்படுத்தினர் என்றெல்லாம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக அலுவலகங்களில் ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றம்! மாவட்டச் செயலாளர்கள் அதிரடி!
அதிமுக குழப்பம்
அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை குறித்த குழப்பம் தீவிரமடைந்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அரங்கேறிய மோதல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினர். ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரியாமலேயே திடீரென இந்த அறிவிப்பு தலைமை நிலைய செயலாளர் பெயரில் அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார் ஓபிஎஸ். அந்த அழைப்பு எதிராக உடனடியாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். தொடர்ந்து நேற்று காலை தேனியில் இருந்து சென்னை கிளம்பினார். சென்னை வந்த அவர், முக்கிய நிர்வாகிகள் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடிதம்
அதன்படி, அதிமுகவில் நிகழ்ந்து வரும் தற்போதைய குழப்பமான சூழல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
திடீரென குழப்பம்
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை ஜூன் 23-ஆம் தேதி நடத்த ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஜூன் 2-ஆம் தேதி அழைப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 23 வரைவு தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டு, அதற்கு ஒருங்கிணைப்பாளராகிய தான் ஒப்புதல் அளித்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகாலத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட சூழலில், கட்சி நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளை சீர்குலைக்கும் வகையில், சிலர் ஒற்றைத்தலைமை என்ற குரலை எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுக் குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற தீர்மானங்கள் குறித்து எந்தவொரு முடிவையும் எடுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்ததாகவும், இதனை மீறி, அவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதாக புதிய தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்மானம் குறித்து தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். பொதுக்குழுவில் உரிய விவாதம் நடத்தப்படாமலேயே 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.
பொதுக்குழுவே செல்லாது
உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முதல்முறையாக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், அமைப்புரீதியான தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததால், இந்த பொதுக்குழுவே செல்லாததாக மாறிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்படி, கட்சியின் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பதற்கு மட்டுமே அதிகாரம் படைத்த அவைத் தலைவர், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உறுப்பினர்களாக இல்லாதவர்கள்
உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பொதுக்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து இல்லாமலேயே கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த கூட்டத்தில் தன் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையான முடிவு
எனவே, இந்தக் கூட்டம் செல்லாது என்றும், அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுப்பது என்று தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சியின் பொருளாளர் என்ற முறையில், பொதுக்குழுக் கூட்டத்தில் கணக்குகளைத் தாக்கல் செய்ய தனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
5 ஆவணங்கள்
தேர்தல் ஆணையத்துக்கு அதிமுகவின் சமீபத்தில் நிகழ்வுகள் குறித்து ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில் பொதுக்குழு கூட்டத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பை விரிவாக எழுதியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அந்தக் கடிதத்தோடு, நீதிமன்ற தீர்ப்பு நகல், எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்ட அழைப்பு, தனது அறிக்கை உள்ளிட்ட 5 ஆவணங்களையும் இணைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அநீதி
தேர்தல் மூலம் நியாயமாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு சிலர் சூழ்ச்சியால் குடைச்சல் கொடுத்து வருகின்றனர் என்கிற ரீதியில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த பொதுக்குழுவுக்கு திட்டமிட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு, ஓபிஎஸ்ஸின் இந்தக் கடிதம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியும் தனது தரப்பு அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பார் என்று கூறப்படுகிறது.