எடப்பாடி பழனிசாமி படாதபாடுபட்டு பில்டப் செய்த ஆளுமை-ஓபிஎஸ்-ன் ஆடுபுலி ஆட்டத்தால் தகர்ந்தது!
சென்னை: தமிழக முதல்வர் பதவியில் 4 ஆண்டுகள் பிரச்சனையே இல்லாமல் இருந்து கொண்டு தமது இமேஜை ஆட்சி அதிகாரங்களால் பில்டப் செய்து வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பெரும் போராட்டம் நடத்தி கடும் அதிருப்திக்கு மத்தியில்தான் தேர்வாகி இருப்பது அவர் அரும்பாடுபட்டு உருவாக்கிய இமேஜை சுக்கு நூறாக சிதறடித்திருக்கிறது.
சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம் வாசித்தார். அவரை டெல்லி பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி. இருந்தபோதும் மாஜி முதல்வரான ஓபிஎஸ்ஸை துணை முதல்வர் பதவியில் மட்டும் உட்கார வைத்தார்.
ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி என்பது ஒரு கவுரவத்துக்கு மட்டும்தான். ஆனால் ஆட்சியில் முடிவெடுக்கும் ஒற்றை அதிகாரம் படைத்தவராக எடப்பாடியார் தன்னை கட்டமைத்துக் கொண்டார். கூவத்தூரில் தம்மை ஆதரித்த அதிமுக எம்.எல்.ஏக்களை தக்க வைத்துக் கொள்ள எத்தனை எத்தனையோ பேரங்களை வெவ்வேறு வழிகளில் எல்லாம் கொடுத்து வைத்தார்.

எடப்பாடி விஸ்வரூபம்
இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒருசேர எடப்பாடி பக்கம் இருப்பதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. அரசு தொடர்பான முடிவுகளையும் ஓபிஎஸ் தன்னிச்சையாக எடுக்க முடியாமல் செக் வைத்து கொண்டே இருந்தார் எடப்பாடி. அத்துடன் தம்மை அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக உருவாக்கிக் கொள்ள கொங்கு மண்டல அமைச்சர்கள் மூலம் அத்தனைவிதமான வியூகங்களையும் வகுத்தவரும் எடப்பாடியார்தான்.

ஓபிஎஸ் விளம்பரங்கள்
ஒருகட்டத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பிரச்சனையில் ஓபிஎஸ் கோதாவில் குதித்தார். ஆனால் அதிகாரத்தில் இருந்த எடப்பாடி இதை லாவகமாக முறியடித்தார். இதனால் கோபப்பட்ட ஓபிஎஸ், பத்திரிகைகளில் தனக்கு என இமேஜ் கட்டமைக்கும் வகையில் விளம்பரங்களை கொடுத்து வெறுப்பேற்றினார். அதாவது அதிகாரப்பூர்வ முதல்வர் வேட்பாளரான எடப்பாடிக்கு நெருக்கடி தரும் வகையில்தான் ஓபிஎஸ் இப்படி விளம்பரங்களை கொடுத்தார்.

ஈபிஎஸ் விளம்பரங்கள்
இதற்கும் பதிலடி கொடுத்த எடப்பாடி, வெற்றிநடை போடும் தமிழகம் எனும் விளம்பரங்களை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இடைவிடாமல் செய்தார். அதேபோல் வேட்பாளர் தேர்விலும் தாமே அதிமுகவின் ஏகப் பிரதிநிதி என்பது போல நடந்து கொண்டார் எடப்பாடி. தேர்தல் பிரசாரத்திலும் கூட ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டினார். இப்படி ஒவ்வொரு நகர்வாக தம்முடைய இமேஜை கட்டமைத்து எப்படியாவது அதிமுகவை தமது ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்தாக வேன்டும் என்பதி விடாப்பிடியாக முயற்சித்தார் எடப்பாடி.

படாதபாடு பட்டு எதிர்க்கட்சி தலைவர்
சட்டசபை தேர்தலில் எடப்பாடி எதிர்பார்த்தது போலவே ஓபிஎஸ் தோற்றது. இதுபோதும் இனி அதிமுக நம் வசம் என காத்திருந்த எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியத்தை எதிர்க்கட்சித் தலைவர் விவகாரத்தில் கொடுத்தார் ஓபிஎஸ். 2 முறை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தும் எடப்பாடியால் ஓபிஎஸ்ஸை ஓரம்கட்டவும் முடியாமல் வெல்ல முடியாமல் தண்ணி குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இப்போதும் கூட ஓபிஎஸ்ஸின் அதிருப்திக்கு மத்தியிலேயேதான் எடப்பாடி, எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார்.

ஈபிஎஸ் இமேஜை உடைத்த ஓபிஎஸ்
தமக்கு எதிராக அதிமுகவில் இருந்த முட்டுக்கட்டைகளை அகற்றிவிட்டோம்; இனி எல்லாம் நமக்கே ஜெயம் என மனப்பால் குடித்தவர் எடப்பாடி பழனிசாமி. அந்த எடப்பாடி பழனிசாமி இத்தனை ஆண்டுகாலம் சிறு சிறுக சேர்த்து உருவாக்கி வைத்த மாயபிம்பமான இமேஜை தமது கலகக் குரலால் சுக்கு நூறாக சிதைத்து நொறுக்கி எறிந்துவிட்டார் ஓபிஎஸ் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications