ஓ என் நிலைமை குறித்து சட்டசபையில் பாடியதை கேட்கிறீர்களா?.. அதுரகசியம், பரம ரகசியம்.. ஓபிஎஸ் பதில்
சென்னை: நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என சட்டசபையில் பாடியது ஏன் என கேட்ட செய்தியாளர்களிடம் அது ரகசியம், பரம ரகசியம் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வருவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.
அதன்படி திமுக ஆட்சி அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை முதல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்தது.

வேளாண் மானியக் கோரிக்கைகள்
இந்த நிலையில் சட்டசபையில் கடந்த சனிக்கிழமை அன்று வேளாண்மை, பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம் மீது உரை
அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ பன்னீர் செல்வம் இந்த தீர்மானம் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்க்கும் விவகாரத்தில் நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. இதுவே என் நிலை என பாடியிருந்தார்.

துரைமுருகனுக்கு தெரியும்
மேலும் தனது நிலை குறித்து சட்டசபையின் முன்னவர் துரைமுருகனுக்கு நன்றாகத் தெரியும் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் பாடிய பாடல் வரிகளில் வேளாண் சட்டங்களை ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாத நிலையில் தான் இருப்பதாக ஓபிஎஸ் கூறியதை காட்டிலும் நிறைய அர்த்தங்கள் உள்ளதாக அரசியல் நோக்காளர்கள் கருதினார்கள்.

சிவாஜி நடித்த படத்தின் பாடல்
சிவாஜி, பத்மினி, சரோஜா தேவி நடித்த தேனும் பாலும் படத்தில் டி.எம். சவுந்திரராஜன் பாடிய இந்த பாடலை அவர் எடப்பாடி பழனிச்சாமியையும் சசிகலாவையும் மனதில் வைத்து பாடியிருக்கலாம் என சிலர் கூறிவருகிறார்கள். இது குறித்த பெரும் விவாதம் எழுந்த நிலையில் இன்றைய தினம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
Recommended Video

அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா
பின்னர் காமராஜர் சாலையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு என்பதற்கு அர்த்தம் என்ன என்றும் எதை மனதில் வைத்து இவ்வாறு பாடினீர்கள் என செய்தியாளர்கள் ஓ பன்னீர் செல்வத்திடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ரகசியம்.. பரம ரகசியம் என பதிலளித்தார்.

ஜெயலலிதா பலகலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா
மேலும் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்கும் மசோதா குறித்து ஓ பன்னீர் செல்வம் கூறுகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை நீக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் இருக்கக் கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. கல்வித் துறையில் எந்த மாநிலமும் செய்ய முடியாததை ஜெயலலிதா செய்து காட்டியவர். மாநில வருவாயில் நான்கில் ஒரு பங்கை கல்வித் துறைக்காக ஒதுக்கியவர் ஜெயலலிதா என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications