இதே நிலை நீடித்தால்... தமிழகத்தில் மின்வெட்டு வரக்கூடும்... அரசை அலர்ட் செய்யும் ஓ.பன்னீர்செல்வம்..!
சென்னை: நிலக்கரி பற்றாக்குறை நீடிக்குமேயானால் தமிழகத்தில் நிச்சயம் மின்வெட்டு வரக்கூடும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசை அலர்ட் செய்திருக்கிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்தி, மத்திய நிலக்கரித்துறை அமைச்சருடன் பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நிலக்கரி
நிலக்கரிக்கு உலக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவை, குறிப்பாகத் தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனல்மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்திய நிலக்கரி நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அளவு குறைந்து வருவதாகவும், தமிழ்நாட்டின் தினசரி நிலக்கரி தேவை 62,000 டன் என்றிருக்கின்ற நிலையில், 60 விழுக்காடு நிலக்கரிதான் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படுகிறது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

பத்திரிகைச் செய்தி
மேலும் சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்ததன் காரணமாக, ஏற்கெனவே நீண்டகால மற்றும் நடுத்தரக் கால ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களும் தங்களுடைய உறுதிமொழியை நிறைவேற்றாத சூழ்நிலையில் இருப்பதாகவும், நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள தனியார் அனல்மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போதைய நிலைமை ஐயத்திற்கு இடமளிக்கக் கூடியதாக இருப்பதாகவும்,பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

கவலை அளிக்கிறது
அனல்மின் நிலையங்களின் தினசரி நிலக்கரி தேவையில் 20,000 டன் மத்திய அரசின் நிறுவனத்தால் குறைத்து அனுப்பப்படுவதன் காரணமாக, அனல்மின் நிலையங்களில் உள்ள நிலக்கரியின் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

மின் வெட்டு ஏற்படும்
இந்த நிலைமை நீடித்தால், தமிழ்நாட்டில் ஆங்காங்கே மின்வெட்டு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டு அனைத்துப் பொருட்களின் விலையும் உச்சத்தைத் தொடக்கூடிய நிலைமை ஏற்படும். இந்த நிலைமையைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

அழைத்து பேசுங்கள்
எனவே, தமிழ்நாடு முதல்வர் இந்தப் பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிற்குத் தேவையான நிலக்கரி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஒடிசா மாநிலம் சந்திரபிலா நிலக்கரி தொகுதியிலிருந்து நிலக்கரி எடுக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்தின் அனுமதியைப் பெறத் தேவையான அழுத்தத்தை மத்திய அரசிற்கு அளித்து, அங்கு மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications