கோவையில் மாநாடு.. தேதி குறிச்சாச்சு.. மா.செக்கள் கூட்டத்திற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
சென்னை: அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி கோவையில் மாநாடு நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினர். ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்ட சீனியர்களும், ஓபிஎஸ் டீம் மா.செக்களும் பங்கேற்றனர்.

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி கோவையில் மாநாடு நடத்த ஓபிஎஸ் அணி முடிவு செய்துள்ளது. இதனை, கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தெரிவித்தார். ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவோம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது மாநாடு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது ஓபிஎஸ் அணி.
அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் நிலையில், அனைத்து மாவட்டத்திற்கும் மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். முன்னதாக திருச்சியில் மாநாடு நடத்திய ஓபிஎஸ், அடுத்து காஞ்சிபுரத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தினார். அப்போது மழை பெய்ததால் அந்தப் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிந்த நிலையில், தங்களுடன் பாஜக தொடர்பில் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில், தெரிவித்தார். சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து வந்தாலும், அரசியல் களத்தைப் பொறுத்தவரை இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் தான், ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி கோவையில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநாடு நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. அதிமுகவின் 52-வது தொடக்க நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து தொண்டர்களையும் நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "நாங்கள்தான் அதிமுக, இரட்டை இலை வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. பாஜக தேசிய தலைமை உடன் நட்பின் அடிப்படையில் பேசி வருகிறேன். கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி உறுதியானவுடன் முதலில் உங்களுக்குத்தான் சொல்வோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications