எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து.. மக்களை சந்திக்க புறப்படும் ஓபிஎஸ்.. விரைவில் அறிவிப்பாம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக விரைவில் அறிவிப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது விவாதமாகி இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் அமமுக ஆகியோருடன் ஓபிஎஸ் நெருக்கம் காட்டி வந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெற்றதன் காரணமாக தென் மாவட்டங்களில் பாஜகவுக்கும் செல்வாக்கு அதிகரித்தது. இதன் காரணமாக மதுரை, ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக 2வது இடத்தை பிடித்தது.

பாஜகவுடன் ஓபிஎஸ்
இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போதே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமித்ஷா, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று தெரிவித்தார். அதன்பின் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.
பாஜக உறவில் விரிசல்
ஆனால் இதுநாள் வரை அதிமுக தரப்பில் ஒரு வார்த்தை கூட அப்படி சொல்லப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் சென்னை மற்றும் மதுரை வந்த அமித்ஷா ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்திக்கவில்லை. இதுதொடர்பாக ஓபிஎஸ் பேசுகையில், அமித்ஷா எங்களை சந்திக்காதது வருத்தமே என்று தெரிவித்திருந்தார். இதனால் ஓபிஎஸ் மற்றும் பாஜக இடையிலான உறவில் விரிசல் விட்டிருப்பதாக பார்க்கப்பட்டது.
தலைவர்கள் சுற்றுப்பயணம்
மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் கூட ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்பின் பாமக தலைவர் அன்புமணி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் சுற்றுப்பயணம்
தொடர்ந்து செப்டம்பர் மாதம் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்துள்ளார்.
ஆதரவாளர்கள் குழப்பம்
இது அவரது ஆதரவாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஓபிஎஸ் ஆதரித்து வரும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், யாருக்கு ஆதரவாக அல்லது யாருக்கு எதிராக மக்களை சந்திப்பார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications