தர்மயுத்தம் 2.0? செய்தியாளர்களை நாளை சந்திக்கப் போவதாக ஓபிஎஸ் 'பரபர' அறிவிப்பு
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தேர்தலையும் சந்திப்போம் என்கின்றனர்.
துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவில் இருந்தாராம் ஓபிஎஸ்!
அரசு நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு
இதனையே அண்மையில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தினார். ஆனாலும் ஓபிஎஸ் தாமே முதல்வர் வேட்பாளர் என்பதில் பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளை நேற்று புறக்கணித்துவிட்டு வீட்டில் ஆதரவாளர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ்.
ராஜினாமா செய்வதாக பரபரப்பு
இதனால் ஓபிஎஸ் என்ன அதிரடி காட்டப் போகிறார் என்கிற பரபரப்பு நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. மேலும் துணை முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று திடீரென சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஓபிஎஸ். அப்போது முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நாளை பிரஸ் மீட்
இதற்கு, நாளை நான் செய்தியாளர்கள சந்திக்க இருக்கிறேன் என்று மட்டும் ஓபிஎஸ் பதில் கொடுத்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அக்டோபர் 7-ந் தேதிதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என கேபி முனுசாமி கூறியிருந்தார்.
தர்மயுத்தம் 2.0?
இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் தனியே நாளை செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருப்பது புதிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. ஏற்கனவே நடத்தியதுபோல இன்னொரு தர்மயுத்தத்துக்கான - அதாவது தர்மயுத்தம் 2.0 அறிவிப்பை ஏதேனும் ஓபிஎஸ் வெளியிடுவாரோ? என்கிற விவாதமும் களைகட்டி இருக்கிறது.