ரைட்டு.. திடீரென ஜெயா டிவியில் தோன்றிய ஓ.பன்னீர்செல்வம்.. 5 ஆண்டுகளுக்கு பிறகு பனித்த கண்கள்!
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக இருந்த ஜெயா டிவி 24ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அந்த டிவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் ஆதரவு தொலைக்காட்சியாக இருக்கும் ஜெயா டிவிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் சிறப்பு பேட்டியளித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 1999ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவருடைய அறிக்கைகள், செய்திகள் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்படும். அவரது மறைவிற்குப் பிறகு ஜெயா தொலைக்காட்சி சசிகலா வசம் சென்று விட்டது.
அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுட்டு வந்த ஜெயா டிவி அதிமுகவிற்கு எதிராகவே செய்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆதரவு செய்திகளை ஜெயா தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது.

இபிஎஸ் - ஓபிஎஸ்
இதனையடுத்து அதிமுக செய்திகளை வெளியிட எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்கினர். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக பிளவு பட்டுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் பற்றி செய்திகளும் அவரது பேட்டிகளும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதில்லை.

ஒன்றிணைய விருப்பம்
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த நிலையில், அனைவரும் ஓன்றினைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி இருந்தார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், டிடிவி தினகரனோ ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் ஜெயா டிவிக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் சிறப்பு பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
ஜெயா டிவி தொடங்கப்பட்டு தனது 24 ஆம் ஆண்டு தினத்தை இன்றைய தினம் கொண்டாடி வருகிறது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜெயா டிவி வாழ்த்து பெற்றுள்ளது. அந்த வகையில் ஜெயா டிவியின் 24 ஆண்டு விழாவிற்க்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில், புரட்சி தலைவி அம்மா அவர்களால் 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜெயா தொலைக்காட்சி, 23 ஆண்டுகள் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் அனைத்து நிலைகளிலும் ஜெயா தொலைக்காட்சி முன்னனி தொலைக்காட்சியாக இருக்கிறது.

ஜெயா தொலைக்காட்சிக்கு வாழ்த்து
சமூக பொருளாதார நிலை, அன்றாட மக்களின் வாழ்க்கை நிலை போன்ற செய்திகளையும் வழங்கி வருகிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து நிலைகளிலும் ஜெயா தொலைக்காட்சி உடனுக்குடன் செய்திகளை முந்தித் தருவதில் முன்னணி தொலைக்காட்சியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வெற்றி பயணத்தில் 23 ஆண்டுகள் உழைத்திருக்கும் தொலைக்காட்சியின் அனைத்து நிலையிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா ஜெயா டிவி
ஜெயலலிதா இருக்கும் வரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாகவும், 'நமது எம்ஜிஆர்' அதிகாரப்பூர்வ நாளிதழாகவும் இருந்து வந்தது. அவர் முதல்வராக இருக்கும்போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், வேட்பாளர் தொடர்பான அறிவிப்புகள், அரசாணைகள், உத்தரவுகள், அறிக்கைகள் உள்ளிட்டவை முதலில் ஜெயா தொலைக்காட்சியில்தான் ஒளிபரப்பாகும். அதன் பிறகே மற்றவர்களுக்கு விவரங்கள் தெரியவரும். இதனால் அதிமுகவினர் மட்டுமல்லாது பிற கட்சியினர்கூட பார்க்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றதாக இருந்தது.

ஜெயா டிவியில் ஓ.பன்னீர் செல்வம்
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்ததைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். இதனால் சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் அதிமுக 2 அணிகளாக பிரிந்தது. அப்போது ஜெயா டிவி, 'நமது எம்ஜிஆர்' நாளிதழ் நிர்வாகமும் சசிகலா வசம் சென்றது. அதன் பிறகு ஓபிஎஸ்ஸின் முகத்தை ஜெயா டிவியில் காட்டுவதில்லை. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஓபிஎஸ் பேட்டி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி இருப்பது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா - ஓபிஎஸ் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications