"தர்மயுத்தம் 2.o.." இது மட்டுமே ஒரே காரணம்.. அதிமுக நிர்வாகிகளிடம் மனம் விட்டு பேசிய ஓபிஎஸ்!
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் இப்போது சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் இப்போது சுமார் 6 மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தொடர்ந்து இரு பிரிவுகளாகவே பிரிந்து இயங்கி வருகின்றனர்.
அதாவது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எப்படியொரு சூழல் உருவானதோ, அதேபோன்ற ஒரு சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலைமை இப்போதைக்குச் சரி ஆவதாகத் தெரியவில்லை என்றே சொல்லலாம்.

அதிமுக குழப்பம்
முன்பு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரின் இரட்டை தலைமை கீழ் இயங்கி சமயத்தில் அதிமுகவால் எந்தவொரு தேர்தலிலும் பெரியளவில் வெல்ல முடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் தோல்வி தான். இதனால் அப்போதே இரு தரப்பிற்கும் இடையே பூசல் இருந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது இது வெளிப்படையாகத் தெரியவில்லை.

இரு கோஷ்டி
இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் திடீரென ஒற்றை தலைமை கோஷம் எழுந்தது. ஒரே தலைமையில் அதிமுக இயங்க வேண்டும் என ஜெயக்குமார் முதலில் கூற, அதையே பலரும் வலியுறுத்தத் தொடங்கினர். அப்போது முதலே அதிமுக இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டு உள்ள போதிலும், இந்தப் பஞ்சாயத்து இப்போதைக்கு முடிந்ததாகத் தெரியவில்லை.

மனம் விட்டுப் பேசிய ஓபிஎஸ்
தனித்தனியாக இரு தரப்பும் கூட்டம் நடத்தி, எதிர்த் தரப்பைச் சாடுவதையும் தவறுவதில்லை. இந்தச் சூழலில் ஓ. பன்னீர்செல்வம் இந்த உட்கட்சி பிரச்சினை குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தேனி பெரியகுளம் அடுத்துள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவை செல்வராஜ் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பல முக்கிய கருத்துகளை மனம் விட்டுப் பேசியுள்ளார்.

சிலரது சுயநலம்
அதைத் தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் பேசும்போது சிலர் சுயநலத்திற்காக அதிமுக சட்ட விதிகளைத் திருத்தியதாகச் சாடினார். அதிமுக அடிப்படை தொண்டர்களால் ஆன இயக்கம் என்பதால் எந்தவொரு தொண்டனும் தலைமைக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்திருந்த அதிமுக சட்ட விதிகளைச் சிலர் சுயநலத்திற்காகத் திருத்தியுள்ளதாகச் சாடினார்.

தர்மயுத்தம் 2.o
மேலும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்த விதிகளின்படியே அதிமுக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தர்ம யுத்தத்தைத் தொடங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இப்போது அவர்கள் செய்துள்ள விதிகளின் திருத்தத்தால் கோடீஸ்வரர்களும் மிராசுதாரர்களும் மட்டுமே தலைமைக்கு வர முடியும் என்ற மோசமான ஒரு சூழல் உருவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் அதிமுகவை வழிநடத்திச் செல்ல அனைவரது உதவியும் தேவை என்று கூறிய ஓபிஎஸ், தவறான வழியில் சென்றால் எங்கும் போக முடியாது என்றும் அதனால் செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் கோஷ்டி மோதல் தொடரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக
அதிமுக உட்கட்சி குழப்பம் தொடங்கிய போது, பலரும் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்தனர். இருப்பினும், கடந்த சில வாரங்களாக எடப்பாடி பக்கம் சென்ற நிர்வாகிகளில் சிலர் மீண்டும் ஓபிஎஸ் பக்கம் திரும்பி வருகின்றனர். இதனால் இன்னும் கூட அதிமுகவில் முடியாமல் தொடர்ந்தே வருகிறது.












Click it and Unblock the Notifications