ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை! யார் யார் வீடுகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும் தெரியுமா? இதை படிங்க
சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில் யார் யார் வீடுகளில் கள ஆய்வு நடத்தப்படும்? என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் தற்போது அதிகாரிகள் அதற்கு விளக்கமளித்துள்ளனர்.
வீடுகளில் இருக்கும் பெண்கள் எதையுமே செய்வதில்லை என்று காலங்கலாமாக சொல்லப்பட்டு வந்த நிலையில், நாங்கள் இல்லையெனில் குடும்பம் என்கிற அமைப்பே இருக்காது என பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கருத்து போர் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கான உரிமை தொகை தரப்பட வெண்டும் எனவும் குரல்கள் எழுந்தன.

வீட்டில் சமைத்து, துணி துவைத்து, சுத்தம் செய்து என ஏராளமான வேலைகளை செய்தாலும் அவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படாததாகவே இருக்கிறது. இப்படி இருக்கையில், ஒரு வேளை நாங்கள் இந்த பணிகளை செய்யாமல் இருந்தால் ஆண்களால் எப்படி வெளியில் சென்று உழைக்க முடியும்? என்று பெண்கள் கேள்வியெழுப்ப தொடங்கினர். இந்நிலையில்தான் கடந்த 2021ம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்டபோது பெண்களுக்கான உரிமைத் தொகை குறித்த வாக்குறுதியை கொடுத்தது.
இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக இவர் பதவியேற்ற நிலையில், எப்போது உரிமைத்தொகை கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினர். இது பெரும் விவாதமாக எழுந்த நிலையில், அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இதற்கான தயாரிப்பு பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்காது. மாறாக இதனை பெற சில அளவுகோல்களை அரசு அறிவித்துள்ளது. இப்படியாக தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் நடத்தி பயனாளிகளை கண்டறிந்து விண்ணப்பங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்ட முகாம் ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரையும் நடைபெறுகிறது.
இன்றுடன் முதல்கட்ட சிறப்பு முகாம் முடிவடைகிறது. தற்போது மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கப்பட்ட சுமார் 80 லட்சம் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கும் பணிகள் நடைபெறும். அதாவது தமிழ்நாடு முழுவதும் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் அடைகள் இருக்கின்றன. இதில் ஏற்கெனவே குடும்ப உறுப்பினர், அதன் தலைவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்த டேட்டா தமிழ்நாடு அரசிடம் இருக்கிறது. இத்துடன் தற்போது பெறப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள தரவுகள் சரிபார்க்கப்படும். இதன் அடிப்படையில்தான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் அல்லது மறுக்கப்படும். இந்த செயல் முறையின்போது விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டால் அதை 'ஏன் என்னுடைய விண்ணப்பம் மறுக்கப்பட்டது?' என கேள்வியெழுப்ப விண்ணப்பதாரருக்கு உரிமை இருக்கிறது. எனவே அவர் மேல்முறையீடு செய்யலாம். இப்படி மேல் முறையீடு செய்யப்படும் விண்ண்பபங்களை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்வார்கள்.
அதாவது விண்ணபதாரருக்கு கார் இருக்கிறது எனில் அது குறித்த விவரங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருக்கும். அதை சரிபார்க்கும் போது விண்ணப்பதாரரின் மனு நிராகரிக்கப்படும். ஆனால் மணுதாரர் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் போது வருவாய் கோட்டாட்சியர் விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொள்வார். அந்த ஆய்வில் உண்மை நிலவரம் தெரியவந்துவிடும். என அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பது, ஏற்பது என்கிற முடிவை கோட்டாட்சியர் எடுப்பார்.
ஆக இப்படியாக மேல் முறையீடு செய்யும் வீடுகளில் மட்டுமே கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்வார். அதுவும் எல்லா வீடுகளிலும் ஆய்வு மேற்கொள்ளமாட்டார். முறையான டேட்டாக்கள் இல்லாத வீடுகளில் மட்டுமே ஆய்வு மேற்கொள்வார் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications