ஓடும் வண்டியில் டிரைவருக்கு அடி.. ஒன்று திரண்ட ஓலா ஓட்டுநர்கள்.. சென்னையில் போராட்டம்
Recommended Video
சென்னை: குடிபோதையில் வழக்கறிஞர்கள் எனக் கூறிக் கொண்டு கால்டாக்சி ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100 க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அனகாபுத்தூரை சேர்ந்தவர் ஓலா கால்டாக்சி ஓட்டுநர் லோகநாதன் (32), இவர் இன்று அதிகாலை 3 மணியளவில் கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் சவாரி ஒன்றை எடுத்துள்ளார். காரில் ஏறிய மூவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கார் ஆலந்தூர் நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்த போது காரில் இருந்த மூவரும் ஏசியை போடச் சொல்லி ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். அதற்கு ஓட்டுநர் குடிபோதையில் இருப்பதால் ஏசி போட்டால் காரில் வாசனை வரும் அதனால் போட மறுத்திருக்கிறார். இதனால் காரில் வந்த நபர்கள் தாங்கள் வழக்கறிஞர்கள் எங்களுக்கே ஏசி போட முடியாதா? எனக் கூறி கார் ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் அருகில் இருந்த பால் வைக்கும் டிரே மூலம் தலையில் அடித்ததாக சொல்லபடுகிறது.
இதில் கார் ஓட்டுநருக்கு தலையில் காயமேற்பட்டது. அப்போது அவ்வழியே சென்ற ரோந்து போலீசார் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளார். காவல் நிலையத்தில் மேலும் இருவர் வந்து கார் ஓட்டுநரை மீண்டும் அடித்துள்ளனர். காவல் நிலையத்தில் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருமாறு இரு தரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கால்டாக்சி ஓட்டுநர் தன்னை வழக்கறிஞர்கள் அடித்து விட்டதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வீடியோவை பார்த்துவிட்டு பரங்கிமலை காவல் நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட கால்டாக்சி ஓட்டுநர் குவிந்து வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பரங்கிமலை காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அனைவரும் காவல் நிலையம் அருகே காத்திருக்கின்றனர். கால் டாக்சி ஓட்டுநருக்கு தலையில் 12 தையல் போடப்பட்டுள்ளது.
பரங்கிமலை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிகழ்விடத்தில் சிசிடிசி காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.