முக்கிய பாயிண்ட்! பழைய கேஸ் ஆதாரங்கள் பொன்முடிக்கு சாதகம்.. சுப்ரீம் கோர்ட்டில் வெற்றி நிச்சயமாம்!
சென்னை: பொன்முடி மனைவி நிறுவனத்தில் வருடத்திற்கு 5 கோடி வரை வியாபாரம் நடந்திருப்பதை அதிகாரிகளே ஒப்புக்கொண்டுள்ளார்கள். பழைய வழக்கின் ஆதாரங்கள் எங்களுக்கு உதவும் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர்.இளங்கோ, "அதிமுக ஆட்சி காலத்தில் பொன்முடி மீது பழிவாங்கும் எண்ணத்தோடு சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தில், பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் எதுவும் சேர்க்கவில்லை என்று நிரூபித்து அவருக்கு விடுதலை தரப்பட்டது. இந்த விடுதலையை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன், கீழமை நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை ரத்து செய்தார்.

பொன்முடியையும், அவரது மனைவியையும் நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லியிருந்தார். அதன்படி இன்று ஆஜரானார்கள். பழைய வழக்கு என்பதாலும், 2011ல் இருந்து இதுவரை இந்த வழக்கு நிலுவையில் இருந்ததாலும், அவருடைய வயதை கருத்தில் கொண்டும், கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து, அதை உயர் நீதிமன்றம் மாற்றி எழுதியிருக்கிறது போன்ற காரணங்களாலும் 3 வருட சாதாரண சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
சிறை தண்டனை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். இந்த மேல்முறையீட்டு வழக்கில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்று நம்புகிறோம். ஏனென்றால் பொன்முடியை பொறுத்தவரை, இந்த வழக்கு தொடுத்த போது வெறும் 4.80 லட்சம் ரூபாய்தான் கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது.
பொன்முடியின் மனைவி விசாலாட்சி, விசால் ஆட்டோ மற்றும் பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு 5 கோடி ரூபாய் வரை வியாபாரம் இருப்பதாக வருமான வரித்துறையால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வங்கிக் கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் இவர்களின் விடுதலையை ரத்து செய்து குற்றவாளி என அறிவித்ததற்கு காரணம், பொன்முடியின் மனைவி ஒழுங்காக வருமான வரி ரிட்டர்ன்ஸ் கட்டவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான்.
பொன்முடி மீது 2006-11ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இது. 1996-2001ல் அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இன்னொரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உள்ள ஆதாரங்களை எடுத்து பார்த்தோமானால், பொன்முடியின் மனைவிக்கு குடும்ப சொத்தாக மட்டும் 100 ஏக்கர் நிலம் சித்தூரில் இருந்ததும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு அவரது சகோதரர்கள் அதிகளவில் பணம் கொடுத்ததும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
2002ல் தொடரப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் இந்த வழக்கில் எடுத்து வரப்படவில்லை. இருந்தாலும் இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் விசாலாட்சி, மிக லாபகரமாக தனது நிறுவனத்தை நடத்தி வந்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். 5 கோடி ரூபாய்க்கும் மேலாக ஒரு வருடத்துக்கு வியாபாரம் நடந்திருப்பதும் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உயர் நீதிமன்றம் குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஒரு முடிவுக்கு வந்து இந்த விடுதலையை ரத்து செய்திருக்கிறது. இந்த வழக்கில் நிச்சயமாக மேல்முறையீடு செய்து பொன்முடிக்கு மிக விரைவில் விடுதலையை பெற்றுத் தருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications