மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் எப்போது வரும்? கிளம்பிய மூட்டா
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் பலகட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.. அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி மேம்பாட்டு ஊதியம் நான்கரை வருடங்களாகவே வழங்கப்படாமல் உள்ளதால், இது சம்பந்தமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று மீண்டும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.. இதுகுறித்து மூட்டா செயலர் செய்தியாளர்களிடம் காட்டமாக கூறியது என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுபடியும் அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடந்த தேர்தலின்போது தந்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தியில் பலரும் உள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுபடியும் நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு பெரிய சிரமம் இருக்காதபோது, எதற்காக தயக்கம் காட்டுகிறது என்று ஊழியர்கள் கேட்டு வருகிறார்கள்.
பழைய ஓய்வூதிய திட்டம்
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கிருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்ற வருத்தமும் அரசு ஊழியர்களிடம் உள்ளது.
பழைய ஓய்வூதியம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு கமிட்டி அமைத்துள்ளது. என்றாலும் இதனை ஊழியர்கள் ஏற்கவில்லை..
எதற்காக குழு அமைக்க வேண்டும்
ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், அங்கெல்லாம் அதிகாரிகள் குழுவை அமைத்து அதன் அறிக்கை அடிப்படையில் முடிவெடுக்கவில்லையே.. இங்கு மட்டும் ஏன் இப்படி குழு அமைக்க வேண்டும்? என்று வினா எழுப்பி வருகிறார்கள்.
நேற்றுகூட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழக அரசு நினைத்திருந்தால், எப்போதோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும். அதற்கு நிதிநிலை ஒரு தடையல்ல. மாறாக, தங்களை ஆட்சியில் அமர்த்தியவர்கள் தான் என்றாலும் கூட, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த திமுக அரசுக்கு மனமில்லை.
பாமக காட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய அரசில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த பாமக உறுதியான நடவடிக்கை எடுக்கும்" என்று காட்டமாக கூறியிருந்தார்.
நேற்றைய தினம், பழைய ஓய்வூதியம் கேட்டு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.. பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் மூட்டா
பல்கலை ஆசிரியர் சங்கமான ஏயுடி மற்றும் மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை ஆசிரியர் சங்கமான, "மூட்டா" சார்பில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குநரக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத்தொகை வழங்க வேண்டும், பேராசிரியர்களுக்கு எம்ஃபில், பிஎச்.டி. பட்டத்திற்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மீண்டும் போராட்டம்
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து, மூட்டா செயலாளர் செந்தாமரை கண்ணன் சொல்லும்போது, "அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி மேம்பாட்டு ஊதியம் நான்கரை வருடங்களாகவே வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இது சம்பந்தமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையானால், அடுத்தகட்ட போராட்டத்தையும் முன்னெடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்ட விவகாரம் திமுகவுக்கு நெருக்கடி தந்துவருகிறது.. இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி, அடுத்த மாதம் தன்னுடைய அறிக்கையை தரும் என தெரிகிறது.. அதற்கு பிறகே அரசு ஒரு முடிவை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications