ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற திமுக எதிர்த்ததா? ட்ரெண்டாகும் ஸ்டாலினின் பழைய பதிவு!
சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பழைய ட்விட்டர் பதிவு சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதை அவமானம் என்று ஸ்டாலின் கூறியதாக விஜய் பேசி இருந்தார். அதற்கான பதிலடியாக இந்த பதிவு அமைந்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டதோடு, அவர்களுக்கான நிவாரண உதவியை செய்தார். இந்த நிலையில் சென்னையில் தவெக சார்பாக திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தவெக ஆர்ப்பாட்டம்
அரசியலில் கால் பதித்த பின் விஜய் தலைமையில் நடக்கும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதால் பலரின் கவனமும் திரும்பியது. இதனால் சென்னை சிவானந்தா சாலையில் காலை 8 மணி முதலே தவெக தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள். தவெக தலைவர் விஜய் 10.30 மணியளவில் லாக் அப் மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மேடை ஏறினார்.
விஜய் பேச்சு
கருப்பு டீ சர்ட் அணிந்து "சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்ற பதாகையுடன் விஜய் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினார். இதன்பின் விஜய் பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் மொத்தமாக 24 பேர் போலீஸ் விசாரணையின் போது இறந்திருக்கிறார்கள். 24 குடும்பங்களிடமும் சாரி சொன்னீர்களா? தயவு செய்து சாரி சொல்லிவிடுங்கள்.
சிபிஐ விசாரணை அவமானம்
அஜித் குமார் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட நிவாரணத்தை போல், மற்ற குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுத்தீர்களா? தயவு செய்து நிவாரணம் கொடுத்துவிடுங்கள். சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ மாற்றிய போது, அவமானம் என்று சொன்னீர்கள். இன்று அஜித் குமார் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்ததற்கு பெயர் என்னங்க சார்? அதே அவமானம்தானே..
விஜய் பொய் சொன்னாரா?
ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாக சிபிஐ உள்ளது. ஏன் அங்கு சென்று ஒழிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பேசினார். இந்த நிலையில் ஸ்டாலின் சொல்லாத விஷயத்தை தவெக ஆர்ப்பாட்டம் மேடையில் விஜய் பேசி இருப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இந்த சூழலில், ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் எழுதிய பதிவு ட்ரெண்டாகி இருக்கிறது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்!#JusticeforJayarajAndBennix#ArrestKillersOfJayarajAndBennix
— M.K.Stalin (@mkstalin) June 27, 2020
ஸ்டாலினின் பழைய பதிவு
அந்த பதிவில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என்று கூறி இருக்கிறார். இதன் மூலமாக திமுக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை அவமானம் என்று சொல்லவில்லை என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications