அதிவேகமாக பரவும் ஓமிக்ரான்- ஊரடங்கை தவிர்க்க உடனடியாக கொரோனா தடுப்பூசி போடுங்க.. டாக்டர் ராமதாஸ்
சென்னை: ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக பரவுவதால் ஊரடங்கை தவிர்க்கும் வகையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் எனும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் மொத்தம் 30 நாடுகளில் பரவி இருக்கிறது. இதுவரை உலக நாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதையடுத்து அந்த 2 பேருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை
தமிழகத்திலும் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை; இது தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
இதனிடையே ஓமிக்ரான் பரவல் தடுப்பு தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: ஓமைக்ரான் வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்தவழி தடுப்பூசி செலுத்துவதையும் கொரோனா சோதனை செய்வதையும் தீவிரப்படுத்துவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். அந்த நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

தடுப்பூசி அவசியம்
ஓமைக்ரான் கொரோனாவை தடுக்க தடுப்பூசி மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள் தயக்கமின்றி, தமிழக அரசு நடத்தும் தடுப்பூசி முகாம்கள், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஓமைக்ரான் பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டும்!
Recommended Video

ஊரடங்கை தவிர்க்க தடுப்பூசி
ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவத் தொடங்கினால் ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும். இன்றைய சூழலில் மக்களாலும், அரசாலும் இன்னொரு ஊரடங்கை சமாளிக்க முடியாது. எனவே, ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications