தேர்தலுக்கு ஓட்டு போட போறீங்களா? மீண்டும் கலங்கடித்த ஆம்னி! ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு
சென்னை: தமிழக லோக்சபா தேர்தலுக்கு முந்தைய தினமான 18ஆம் தேதி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக ஏறியிருப்பதால் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக பூத் ஸ்லிப்புகள் வழங்க இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில் மதுரை, திருச்சி, கோவை, தேனி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னையில் படிப்பிற்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள்.
இவர்கள் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இதனால் கூடுதல் பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும். பெரும்பாலானோர் வசதிக்காக ஆம்னி பேருந்துகளை விரும்புவர்.
இது போன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட ஆம்னி பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி லாபம் பார்த்து வந்தன.
இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் தற்போது தேர்தலில் வாக்களிக்க டிக்கெட் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. டிக்கெட் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

கிட்டதட்ட 2 மடங்கு அதிகரித்துள்ளது. தேர்தல் நாளுக்கு முன் தினம் 18 ஆம் தேதி டிக்கெட் புக் செய்யலாம் என பார்த்தால் கட்டணம் அதிகமாகவே உள்ளது. இன்றோ நாளையோ புக் செய்யலாம் என செக் செய்தால் குறைந்த கட்டணம் மட்டுமே உள்ளது. உதாரணமாக சென்னை- மதுரைக்கு செல்ல 18ஆம் தேதி இரவு புக் செய்ய வேண்டும் என்றால் 1499, 1800, 1608, 1699 ரூபாய் என எல்லாமே 1500 ரூபாய்க்கு மேல் இருக்கிறது.
இதே நாளை பயணம் செய்ய டிக்கெட் புக் செய்தால் 599, 750, 882, 799 ரூபாய் என ஆயிரம் ரூபாயை விட குறைவாகவே காட்டுகிறது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சொந்த ஊர்களுக்கு செல்ல 10 ஆயிரம் அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அத்துடன் 2970 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் சென்னையில் இருந்து இன்று முதலே கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications