முதல் முறையாக.. ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற பிறந்தநாளில் வாழ்த்திய ஓபிஎஸ்!
சென்னை: தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிரும் புதிருமாக அரசியல் செய்து வந்த நிலையில், முதல் முறையாக ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி உள்ளார் ஓபிஎஸ்.
அதிமுக சார்பில் 3 முறை முதலமைச்சராக செயல்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டவர். அரசியலில் எடப்பாடி பழனிசாமியால் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அவர் அண்மையில் திமுகவில் இணைந்தார்.

அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவிலேயே இணைந்துள்ளது காலம் செய்த கோலம். திமுகவில் இணைந்ததுமே, அதிமுக அடையாளங்களை ஒவ்வொன்றாகத் துறந்து வருகிறார் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக இருந்த ஓபிஎஸ், ஜெயலலிதா படத்துக்குப் பதிலாக சட்டைப் பாக்கெட்டிலும் ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார்.
இந்நிலையில், முதல் முறையாக, ஸ்டாலின் பிறந்தநாளன்று, ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். திமுகவில் இணைந்தபோது, ஸ்டாலினை ஆரத் தழுவிக்கொண்ட ஓபிஎஸ், அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும், பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் நம்பிக்கையை வென்று வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் நல்ல உடல் தேக ஆரோக்கியத்துடன், தளராத மனவலிமையுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட்டு, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல எல்லாம் வல்ல இறைவன் அருள் எப்போதும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன்.
திராவிட மாடலின் நாயகர்களான தந்தை பெரியார் விதைத்த சமூகநீதி சிந்தனையையும், பேரறிஞர் அண்ணா வடிவமைத்த அரசியல் மரபையும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய திராவிடச் சித்தாந்தத்தையும் செயல்முறை ஆட்சியாக மாற்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் @arivalayam வேர்களை மேலும் வலுப்படுத்தி,… pic.twitter.com/l9UpnLHpRk
— O Panneerselvam (@OfficeOfOPS) March 1, 2026
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவை பெருவெள்ளமாக திரட்டி, மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்தும் கழகத் தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications