இந்தியாவின் சட்டமேதைக்கு 133வது பிறந்தநாள்! அம்பேத்கர் மணி மண்டபத்தில் ஸ்டாலின் மரியாதை!
சென்னை: இந்தியாவின் சட்டமேதையான அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவிக்கச் சென்ற போது திருமாவளவன் அவரை வரவேற்றார்.

சாதி, இனம், மொழி என்கிற வரையறைகளைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கியொலிக்கும் குரலாய் ஒலித்தவர் அண்ணல் அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய மிகப்பெரும் மேதை அண்ணல் அம்பேத்கர்.
'வடநாட்டுப் பெரியார்' என்று அனைவராலும் போற்றிப் புகழப்பட்டும், பாபாசாகேப் அம்பேத்கர் என்றும், அண்ணல் அம்பேத்கர் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

அம்பேத்கர் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்திருந்ததால், படிக்கின்ற பள்ளியிலே தனிமைப்படுத்தப்பட்டதும், அவர் சென்ற பயணங்களின் போது புறக்கணிக்கப்பட்டதும், கல்லூரி படிப்பின் போது சாதியின் பெயரால் பல எண்ணற்ற கொடுமைகளால் அவமானப்படுத்தப்பட்டார்.
தீண்டாமை, சாதியப் பாகுபாடு, முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும் என்பதிலே உறுதி பூண்டிருந்த அம்பேத்கர் சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பட்டியல் சாதி மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கத் தொடங்கியவர் அம்பேத்கர்.

இதனிடையே சென்னையில் அம்பேத்கரி சிலைக்கும், படத்துக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர்கள், சென்னை மேயர் ப்ரியா ராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications