அமித்ஷாவிடம் இதை சொல்லியே ஆகனும்.. சென்னை ஹோட்டலில் அடம்பிடித்த அகோரி! போலீஸ் செய்ததை பாருங்க
சென்னை: தமிழகத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு வந்தார். சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அமித்ஷா தங்கியிருந்த நிலையில் அவரை சந்திக்க அகோரி ஒருவர் வந்தார். கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்திருந்த அவர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய விஷயத்தை கூற வேண்டும் என்று கூறி காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதற்கிடையே தான் சமீபத்தில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

அதிமுக கூட்டணியில் பாஜக விலக்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டாமல் இருந்தார். ஆனால் திடீரென்று கடந்த மாதம் 25ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி உள்பட மூத்த தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இதனால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி மலர உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் அதிமுகவுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் உள்ளது. இதனால் அண்ணாமலையை மாற்ற எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பாஜக மேலிடம் பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் அண்ணாமலை மாற்றம் செய்யப்பட உள்ளார்.
இதற்கிடையே தான் தமிழக அரசியல் சூழல் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ளார். நேற்று இரவு அவர் சென்னை வந்தார். சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அவர் தங்கினார். பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதற்கிடையே தான் அமித்ஷாவை சந்திக்க அகோரி ஒருவர் இன்று அந்த ஹோட்டலுக்கு வந்தார்.
கண்ணில் கூலிங் கிளாஸ், உடல் முழுவதும் திருநீர் பூசியபடி அந்த அகோரி இருந்தார். அவர் அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்று அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கூறினார். மேலும் அமித்ஷாவிடம் முக்கிய விஷயத்தை சொல்ல வேண்டும் என்று கூறி ஹோட்டலுக்குள் நுழைய முயன்றார். ஆனால் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. ஆனாலும் அகோரி விடவில்லை. ஹோட்டலுக்குள் செல்ல தொடர்ந்து முயற்சித்தார். இருப்பினும் போலீசார் அந்த அகோரியிடம் பேசி ஆட்டோவில் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக அமித்ஷா இன்று காலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் வீட்டுக்கு சென்றார்.தந்தை குமரி அனந்தன் சில நாட்களுக்கு முன்பு மறைந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, அமித்ஷா ஆறுதல் கூறினார். அதன்பிறகு அங்கிருந்து மயிலாப்பூரில் உள்ள மூத்த பத்திரிகையாளர் குருமூர்த்தியின் இல்லத்துக்கு அமித்ஷா சென்று தமிழக அரசியல் நிலவரம் பற்றி விவாதித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications