இலவசம் வேண்டாம்; வேலை வேணும்; விலைவாசி குறைக்கணும்... ஒன் இந்தியா தமிழில் ஆதங்கத்தை கொட்டிய மக்கள்!
சென்னை: நீங்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் தொகுதியில் தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ. என்ன செய்ய வேண்டும்? என்று ஒன் இந்தியா தமிழ் சார்பில் சோழிங்கநல்லூர் தொகுதிமக்களிடம் கேள்விகளை முன்வைத்தோம்.
மக்களுக்கு எதுக்கு இலவசம்? இலவசம் வேண்டாம்; காய்கறிகளின் விலைவாசி, சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அழுத்தம்திருத்தமாக கூறினார்கள் மக்கள்.
அரசியலுக்கு வரும் நடிகர்கள் மீது அதிகம் நம்பிக்கையில்லை என்பதை வெளிக்காட்டிய மக்கள் புதிய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும், அவர்கள் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

பரபரப்பாகும் தேர்தல் களம்
தமிழக தேர்தல் களம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகிய பணிகளை முடித்த அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட ஆயத்தமாக உள்ளன. இந்த நிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று ஸ்டாலினும், கமல்ஹாசனும் அறிவித்து விட்டனர். அதிமுகவும் மாதம் ரூ.1500 தருகிறோம். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக தருகிறோம் என்று கூறிவிட்டது. திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் மேலும் கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
ஒன் இந்தியா தமிழ் எக்ஸ்குளுசிவ்
இவ்வாறு அரசியல் கட்சிகள் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அள்ளிவீச, நீங்கள் அரசியல் கட்சிகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் தொகுதியில் தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏ. என்ன செய்ய வேண்டும்? என்று ஒன் இந்தியா தமிழ் சார்பில் சோழிங்கநல்லூர் தொகுதிமக்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். நாம் கேள்வி கேட்டவுடனேயே, எங்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை; கேட்டால் இதை நிறைவேற்றித் தர ஆள் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அரசியல்வாதிகள் இங்கு வந்து எட்டிப் பார்க்கின்றனர் என்று ஒரே போடாக போட்டனர் பலர்.

விலைவாசியை குறைங்க
வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வசதி, கால்வாய் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கோரிக்கை. அரசு அலுவலகத்தில் எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த லஞ்சத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர். மக்களுக்கு எதுக்கு இலவசம்? இலவசம் வேண்டாம்; காய்கறிகளின் விலைவாசி, சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அழுத்தம்திருத்தமாக கூறினார்கள் மக்கள்.

வேலைவாய்ப்பு வேண்டும்
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ததுபோல் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கும் அரசு உதவனும், பள்ளிகள் திறக்காமல் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதால் பள்ளிக்கூட்டங்களை திறக்கணும், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் மக்களின் ஸ்ட்ராங்கான கோரிக்கையாக இருக்கிறது. சதுப்புநிலங்களில் அடுக்குமாடி கட்டிடம் அமைக்க அனுமதி கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிரந்தமாக குடியிருக்க பட்டா தர மறுக்கிறார்கள் என்றும் ஒரு சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

புதிய தலைமுறை அரசியலுக்கு வரணும்
அரசின் ரூ.2,500 உதவித் தொகையை வைத்து ஒரு சில நாட்கள் கூட குடும்பம் நடத்த முடியாது. எங்களுக்கு பண உதவி வேண்டாம். விலைவாசி உயர்வு இல்லாமல் நாங்கள் நிம்மதியாக பிழைக்க வழிவகை வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறினார்கள் சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள். அரசியலுக்கு வரும் நடிகர்கள் மீது அதிகம் நம்பிக்கையில்லை என்பதை வெளிக்காட்டிய மக்கள் புதிய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும், அவர்கள் நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

பெண்கள் கஷ்டங்களை புரிந்தவர்கள்
பெண்கள் அரசியலுக்கு அதிகளவில் வருகை புரிய வேண்டும் என்பதும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. பெண்கள் குடும்ப கஷ்டங்களை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் வந்தால் ஆளுமையுடன் நாட்டை வழிநடத்துவார்கள். பெண்களுக்கு அரசியலில் 50% இடம் கொடுக்க வேண்டும் என்று முகமலர்ச்சியுடன் கூறினர் சோழிங்கநல்லூர் மக்கள்.












Click it and Unblock the Notifications