"ஒன்இந்தியாதமிழ்" திருப்பாவை,திருவெம்பாவை பாடல் போட்டியில் பரிசு வென்ற குழந்தை செல்வங்கள் மகிழ்ச்சி!
ஒன்இந்தியா தமிழ் நடத்திய திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டியில் அசத்தலாக திருப்பாவை பாடிய 3 குழந்தைகள், முதல் பரிசான தலா 1000 ரூபாய்க்கான அமேசான் கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: ஒன்இந்தியா தமிழ் இணையதளம் நடத்திய திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டியில் அசத்தலாக திருப்பாவை பாடிய 3 குழந்தைகள், முதல் பரிசான தலா 1000 ரூபாய்க்கான அமேசான் கிப்ட் வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு வென்ற செல்லங்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மார்கழி மாதத்தில் ஆலயங்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் திருப்பாவை, திருவெம்பாவை ஒலித்துக்கொண்டிருந்தது. இறை பக்தி அதிகம் நிறைந்த மாதத்தில் குழந்தைகளுக்கு ஒன் இந்தியா தமிழ் இணையதளம் சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி அறிவிக்கபட்டது.
உங்கள் வீட்டு குட்டீஸை அழகாக ஆண்டாளைப் போல அலங்கரித்து, திருப்பாவை பாட வைத்து வீடியோவாக எங்களுக்கு அனுப்புங்கள். அதிக அளவில் திருப்பாவை பாடிய குழந்தைகளுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன. 1000 ரூபாய்க்கான அமேசான் வவுச்சர் பரிசளிக்கப்படும் என்று வாட்ஸ்அப் எண்ணுடன் அறிவிப்பை வெளியிட்டதுதான் தாமதம் நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு வீடியோக்கள் குவிந்தன.
ஒன்இந்தியாதமிழ்' திருப்பாவை, திருவெம்பாவை பாடல் போட்டி: குவிந்த வீடியோக்கள்! 3 பேருக்கு முதல் பரிசு
பெருநகரம், சிறிய ஊர்கள் என பேதமின்றி தமிழகம் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்.., ஏன்.. வெளிநாடுகளில் இருந்தும் நமது வாசகர்கள், தங்களது குழந்தைகளை பாடல்களை பாட வைத்து, வீடியோக்களை அனுப்பி வைத்தனர் பெற்றோர்கள்.
எத்தனையோ பேர் பாடினாலும் சிறப்பாக பாடிய மூன்று குழந்தைகள் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்த, 5ம் வகுப்பு மாணவியான லட்சரா, அச்சு அசலாக ஆண்டாள் போலவே அலங்காரமிட்டு, திருப்பாவையின் 30 பாசுரங்களையும், புத்தகத்தின் துணையின்றி, ராகத்தோடு பாடி அசத்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி திருப்பாவையின் 30 பாடல்களையும் புத்தகம் துணையின்றி பாராமல் பாடி அசத்தியிருந்தார். அதே போல சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி மம்தா ஸ்ரீ, திருப்பாவை பாடல்களை உச்சஸ்தாபியில் ராகத்தோடு பாடியிருந்தார்.
இந்த மூன்று செல்வங்களுக்கும் தலா, 1000 ரூபாய்க்கான அமேசான் கிப்ட் வவுச்சர் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசு பெற்ற குழந்தைகளும், பெற்றோர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.