திமுக மாவட்டச் செயலாளர்கள் ஒன் டூ ஒன் மோதல்! நேரு முன்னிலையில் காரசாரம்! அதிர்ந்த அண்ணா அறிவாலயம்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் இருவரிடையே நடந்த ஒன் டு ஒன் மோதலால் பஞ்சாயத்து செய்த டீமே சற்று அதிர்ந்து போய்விட்டதாம்.
நிலைமை கைமீறிச் சென்றதால், நீங்க இரண்டு பேரும் தலைவரையே பாருங்க என ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று விட்டிருக்கிறார் அன்பகம் கலை.

தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.. அதே போல் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவருக்கும் இடையேதான் அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை பஞ்சாயத்து நடந்துகொண்டிருக்கும் போதே மோதல் வெடித்திருக்கிறது.
ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை, அமைச்சர் நேரு ஆகியோர் முன்னிலையிலேயே இருவரும் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசியிருக்கின்றனர். இந்த பஞ்சாயத்திற்கு காரணமே கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் தேனி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகத்திற்குட்பட்ட கம்பத்தில் அலுவலகம் அமைத்து குழப்பம் ஏற்படுத்துவதாக தலைமைக்கு புகாரை தட்டிவிட்டார்.
அதோடு மாவட்டம் விட்டு மாவட்டம் அரசியல் செய்து தொண்டர்கள் மத்தியில் கோஷ்டியை வளர்க்கிறார் என கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. புகார் தெரிவித்திருந்திருக்கிறார். இது தொடர்பாக இருவரையும் அழைத்து பஞ்சாயத்து பேசிய இடத்தில் தான் வார்த்தைகள் முற்றி ஒன் டு ஒன் சரமாரியாக இருவரும் திட்டிக்கொண்டனர்.

இதற்கு மேல் இவர்களை அமர வைத்து பேசினால் நமக்கு மரியாதை இருக்காது எனக் கருதிய அன்பகம் கலை, நீங்க இரண்டு பேரும் தலைவரை பாருங்க என ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றார். அவரோ இருவருக்கும் அறிவுரைகள் வழங்கியதுடன் உங்கள் இரண்டு பேரின் சீனியாரிட்டிக்கும் இது போல் செய்வது அழகா எனவும் வினவி பஞ்சாயத்தை முடித்துவைத்திருக்கிறார்.
இருப்பினும் தங்க தமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. இடையே இன்னும் பனிப்போர் ஓய்ந்தபாடில்லை. தேனி மாவட்ட திமுகவில் இதே நிலை நீடித்தால் சில அதிரடி ஆக்ஷனை எடுக்கவும் திமுக தலைமை தயாராகிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications