'வெள்ளை அறிக்கை.. அப்போதும், இப்போதும் நிதித்துறைச் செயலர் ஒருவர்தான்..' எடப்பாடி பழனிசாமி பதில்
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் எந்தவொரு பெரிய குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் ஒரே நிதித்துறை செயலாளர் தான் என்றும் தெரிவித்தார்,
Recommended Video
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகத் தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னர் தங்களுக்குப் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். இருப்பினும் அதற்குச் சபாநாயகர் அப்பாவு மறுத்துவிட்டார்.

ஏன் வெளிநடப்பு
இதையடுத்து அனைத்து அதிமுக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் நீட் தேர்வுக்குப் படித்து தயாராக வேண்டும் என்ற அறிவுரையை வழங்காமல் பெரும் குழப்பத்தை இந்த விடியா அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதைக் கண்டித்தே வெளிநடப்பு செய்தோம்.

நிதி துறை செயலாளர் ஒருவர் தான்
திமுக ஆட்சியில் நிதித் துறை செயலாளராக இருந்த சண்முகம் தான் அதிமுக ஆட்சியிலும் நிதித் துறை செயலாளராக பணியாற்றினார். அவர் பதவி உயர்வு பெற்ற பிறகு தமிழ்நாடு நிதித்துறை செயலாளராகக் கிருஷ்ணன் பொறுப்பேற்றார். அவர் தான் இப்போதும் நிதித்துறை செயலாளராகத் தொடர்கிறார். அவர் கொடுத்த புள்ளி விவரத்தை வைத்துக் கொண்டு தான் நாங்களும் பேசுகிறோம். திமுகவும் பேசுகிறது. சுய விளம்பரத்திற்காக வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

விளம்பரம் தேடவே வெள்ளை அறிக்கை
14ஆவது நிதிக்குழு மதிப்பீட்டின் அடிப்படையில் வருவாயில் 75 ஆயிரம் கோடி இழப்பீடு என்றும் அரசின் நலத்திட்டங்கள் சரியான நபர்களுக்குச் சென்று சேருவதில்லை என்றும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளார். வெள்ளை அறிக்கை என்பது விளம்பரம் தேடி எடுத்து ஒரு முயற்சியே தவிர வேறு எதுவும் இல்லை. அரிசி குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் 2006-11 காலகட்டத்தில் எப்படி தொலைக்காட்சி வழங்கப்பட்டதோ, அதே முறையைப் பின்பற்றியே அதிமுக அரசிலும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியிலேயே இந்த தவறு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கூற வருகிறாரா? அப்படியில்லை என்றால் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் இந்த முறையை மாற்றியிருக்கலாமா? அதையெல்லாமல் செய்யாமல் முன்னாள் அரசு ஊதாரித்தனமாகச் செலவழித்துள்ளது என அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அவர் விமர்சித்துள்ளார்.

ரெய்டுக்கு என்ன காரணம்
திமுக அரசு பொறுப்பேற்று ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் 100 நாட்கள் ஆகிறது. இது குறித்து அவர்கள் என்ன வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் 100 நாளில் எதையும் செய்ய வில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்த போது பல சாதனைகளைப் படைத்தவர் வேலுமணி. கோவையில் 100/ 100 வெற்றியைத் தேடித்தந்தவர் வேலுமணி. அதை பொறுக்கொள்ளாமலேயே திமுக அரசு ரெய்டு நடத்தியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications