மறுபடியும் ஆட்டம் சூடுபிடிக்குதே.. அமித்ஷாவுடன் மீட்டிங்: ரெடியான எடப்பாடி.. குறுக்கே வரும் ஓபி்எஸ்!
சென்னை : நாளை தமிழ்நாட்டுக்கு வருகை தரும் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சேலத்தில் இருந்து ஈபிஎஸ், தேனியில் இருந்து ஓபிஎஸ் இன்று சென்னைக்கு வரவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் 10 மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்தச் சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித் ஷா பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார். பாஜக - அதிமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதன் அடுத்தகட்டமாக இந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கவுள்ளார். நாளை இரவு அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, ஓபிஎஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என அமித் ஷா வலியுறுத்தியதாக தகவல்கள் கசிந்தன. மேலும், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்ததாகவும், பாஜக போட்டியிடவுள்ள தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்து தரவேண்டும் என அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் சென்னையில் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்கும் போது பாஜகவுக்கான தொகுதிகள் குறித்தும், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அதேபோல ஓ.பன்னீர்செல்வமும் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. தேனி மற்றும் தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் இதற்காக இன்று மாலையே சென்னை வரவுள்ளார். ஓபிஎஸ் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் அமித் ஷா உடனான சந்திப்பு திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 11ஆம் தேதி சென்னை, பள்ளிக்கரணையில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து வேலூரில் நடைபெறும் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் அமித் ஷா.












Click it and Unblock the Notifications