ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. ஆவணங்கள் ஒப்படைப்பு.. விசாரணையை ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை ஐகோர்ட்.
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ஓபி ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்ததாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கடந்த 2012ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூ-மோட்டோ) வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டன. ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து விசாரணையை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications