ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி எனில் பொதுக்குழு உறுப்பினர்கள் எப்படி செல்லும்? ஓபிஎஸ் கோஷ்டி கேள்வி
சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது எனில் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி மட்டும் எப்படி செல்லுபடியாகும் என்று ஓபிஎஸ் கோஷ்டியின் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஈபிஎஸ் கோஷ்டியின் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நேற்று காலாவதி ஆகிவிட்டன.தற்போது அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளனர் என்றார்.

சிவி சண்முகம் பதில்
மேலும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 5-1 பங்கு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் பொதுக்குழுவை கூட்டத்தான் வேண்டும்; அதிமுக பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளதாக பதிவுதான் செய்யப்பட வேண்டும்; ஒப்புதல் தேவை இல்லை; அதிமுக அவைத் தலைவரை ஓ.பன்னீர்செல்வமும் ஏற்றுக் கொண்டு பேசியதால் தமிழ் மகன் உசேன் தேர்வு செல்லும் என்றும் சிவி சண்முகம் கூறியிருந்தார்.

பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்து
இதற்கு இன்று ஓபிஎஸ் கோஷ்டியின் வைத்திலிங்கம் பதிலளித்து கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றம், புதிய தீர்மானங்கள் நிறைவேற்ற தடை விதித்திருக்கிறது. அப்படி இருக்கும் போது அவைத் தலைவர் தீர்மானம் கொண்டுவந்தது எப்படி செல்லுபடியாகும்? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டது என்கிறார் சிவி சண்முகம். அப்படி எனில் பொதுக்குழு உறுப்பினர்கள் பதவி மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

தேர்தல் ஆணையம் செல்லவில்லை
தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் தெரிவித்திருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை. நேற்றைய பொதுக்குழுவானது பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வையும்தான் ரத்து செய்திருக்கிறது. சட்டப்படி அவைத் தலைவர் தேர்வு செல்லாததாகிவிட்டது.

அவைத் தலைவர் தேர்தல்
அவைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் பெறப்பட வேண்டும். அப்படி அவைத் தலைவர் தேர்தலும் நடத்தப்படவில்லை. அதிமுக சட்டவிதிகளில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதுவிதிதான். உயர் பதவிகள் அனைத்தும் காலாவதியாகும் நிலையில் பொருளாளரால்தான் பொதுக்குழுவையும் கூட்ட முடியும். இவ்வாறு வைத்திலிங்கம் கூறினார்.












Click it and Unblock the Notifications