மாஜி சபா. தனபாலை முன்மொழிந்த ஓபிஎஸ்! அதிர்ந்த ஈபிஎஸ் அணி தடாலடி முடிவு- எடப்பாடி தேர்வின் பின்னணி!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை ஓ.பன்னீர்செல்வம் அணி முன்மொழிந்தது. இதனால் அதிர்ச்சியில் ஆடிப் போன ஈபிஎஸ் அணி தன்னிச்சையாகவே எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் முடிவு செய்து அறிவித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையில் 65 இடங்களில் வென்ற அதிமுக, எதிர்க்கட்சியாகி உள்ளது. அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அந்த கட்சியில் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டினர். இதனால் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
இதனைத் தொடர்ந்து சென்னையில் 2-வது முறையாக இன்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கும் முன்னரே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டி கோஷங்களை எழுப்பிக் கொண்டு மோதிக் கொண்டனர். இதனால் அங்கு போலீஸ் குவிப்பு குவிக்கப்பட்டது.

தனபாலை முன்மொழிந்த ஓபிஎஸ்
இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு விடாப்பிடியாக நின்றது. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக, இருவருக்குமே வேண்டாம்.. முன்னாள் சபாநாயகரான தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக்குவோம் என முன்மொழிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ஈபிஎஸ் தரப்பு ஆடிப் போனது.

ஈபிஎஸ் அணி திடீர் திணறல்
மாஜி சபாநாயகர் தனபால், தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைவர். அவரை முன்னிறுத்துவதன் மூலம் தலித் எம்.எல்.ஏக்கள் ஆதரவும் மக்கள் மத்தியில் தமக்கான இமேஜும் அதிகரிக்கும் என்பது ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச். ஓபிஎஸ்-ன் இந்த அட்டகாசமான திட்டத்தை உடனே ஏற்க முடியாமல் ஈபிஎஸ் தரப்பு திணறியது.

ஈபிஎஸ் அணிக்கு நெருக்கடி
ஏனெனில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் ஒரு தலித் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஓபிஎஸ் விரித்த வலையில் ஈபிஎஸ் அணி விழுந்துதான் ஆக வேண்டிய நெருக்கடி உருவானது.

எடப்பாடி பழனிசாமி தேர்வு
இதனையடுத்து ஈபிஎஸ் அணியினர் தன்னிச்சையாகவே, எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்து அறிவித்தனர். இதில்கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications