திமுக அல்லது தவெக.. குழம்பி நிற்கும் ஓபிஎஸ்.. முடிவை எடுக்க நெருக்கும் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது?
சென்னை: திமுக அல்லது தவெக கூட்டணி ஆகிய இரு முடிவில் ஒன்றை விரைவில் எடுக்குமாறு ஓபிஎஸ்ஸை அவரின் ஆதரவாளர்கள் நெருக்கி வருவதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்ட சூழலில், சமூக விசுவாசிகளின் ஆதரவை இழப்பதற்கு முன் இறுதி முடிவை ஓபிஎஸ் எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றனர்.
அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்த பின், விரைவில் ஓபிஎஸ் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தேனியில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்திவிட்டு, அதிமுக ஒன்றிணைய நான் ரெடி.. எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் ரெடியா என்று கேள்வி எழுப்பினார். இதனால் மீண்டும் இணைந்த கைகளாக இருவரும் இணைவார்களா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ஓபிஎஸ்ஸை பொதுக்குழு உறுப்பினர்கள் 2,500 பேர் சேர்ந்து நீக்குவதற்கான முடிவை எடுத்தோம். அதனால் ஓபிஎஸ் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இது ஓபிஎஸ் மட்டுமல்லாமல் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஓபிஎஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே ஓபிஎஸ்ஸை சேர்க்க கூடாது என்பதில் சில தென் மாவட்ட நிர்வாகிகளும் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 2019 லோக் சபா தேர்தல் மற்றும் 2021 சட்டசபைத் தேர்தலின் போது பல்வேறு உள்ளடி வேலைகளை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்ததாக குற்றம்சாட்டுகின்றனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுக வலுவிழந்தது என்றும் கூறப்படுகிறது.
தற்போது ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின், அந்தப் பகுதியில் அதிமுகவினர் சில வளரத் தொடங்கியுள்ளனர். தற்போது மீண்டும் ஓபிஎஸ் வந்தால், அந்த நிர்வாகிகள் வெளியேறிவிடுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அஞ்சுகிறது. இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அவரை நெருக்க தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே ஓபிஎஸ் அணியில் இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், மருது அழகுராஜ், சுப்பு ரத்தினம், குப கிருஷ்ணன், தர்மர் உள்ளிட்ட பலரும் விலகி சென்றுவிட்டனர். தற்போது வெல்லமண்டி நடராஜன் மற்றும் உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய இருவர் மட்டுமே ஓபிஎஸ் உடன் நிற்கின்றனர். இவர்களும் வேறு முடிவு எடுப்பதற்கு முன் ஓபிஎஸ் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
இதனிடையே ஓபிஎஸ் தரப்பில் மாவட்ட வாரியாக ஆதரவாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதில் அதிமுகவின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்ட சூழலில், திமுக மற்றும் தவெக ஆகிய இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. திமுகவுடன் கூட்டணி அமைத்து நின்றால், அமைச்சர் பதவி மற்றும் ஆதரவாளர்களும் எம்எல்ஏ ஆகலாம். தவெக பக்கம் சென்றால், பதவிக்கு வருவது கடினம் என்று கணக்கு போட்டுள்ளனர். இதனால் ஓபிஎஸ் விரைவில் முடிவை எடுக்க வேண்டும் என்று விசுவாசிகள் நெருக்க தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications