ஓபிஎஸ் மவுன விரதம்.. செய்தியாளர்களை தவிர்த்தார்.. தனித்து விடப்பட்ட நிலையில் திடீர் ஆன்மீக பயணம்!
சென்னை: தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து விடப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கும் சூழலில் தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி குறித்து பேசாத ஓபிஎஸ் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமானை தரிசனம் செய்து நாளை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மௌன விரதம் இருப்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

ஓபிஎஸ் மவுன விரதம்
இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்து சென்றார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அவர் கார் மூலம் சென்றார். மவுன விரதம் இருந்து வரும் ஓபிஎஸ், நாளை முருகனை தரிசிக்கிறார்.
தன்னோடு இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக திமுக, தவெக, அதிமுக என மாற்றுக் கட்சிகளில் ஐக்கியம் ஆகிவிட்ட நிலையில், ஓபிஎஸ் இப்போது முற்றிலுமாக தனித்து விடப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கழன்று கொண்ட நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்குவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
அதிமுக மோதல்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா தரப்பு தந்த நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது அவருக்கு பக்கபலமாக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் ஆர்.விசுவநாதன், பெங்களூர் புகழேந்தி போன்ற பலரும் நின்றனர். இந்த நிலையில் ஊழல் வழக்கில் சிறை செல்லும் முன்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சென்றார் சசிகலா. இதையடுத்து, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பழனிசாமி, பின்னர் ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொண்டார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் துணை முதல்வராகவும் ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் முதலமைச்சராகவும் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டனர். வலம் வந்தனர். இந்த நிலையில், கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்ததால் ஓபிஎஸ்-ஸையும் அவரது விசுவாசிகளையும் கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்
மீண்டும் அதிமுக-வுக்குள் என்ட்ரி ஆவதற்காக பாஜக-வின் தயவை நாடினார் ஓபிஎஸ். ஆனால் பலிக்கவில்லை. 2026 சட்டசபைத் தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி உடன் கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டது பாஜக. ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க பாஜக முயன்றது. டிடிவி தினகரனுக்கு மட்டும் ஓகே சொன்ன எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுக்கு நோ சொன்னார்.
இந்த கேப்பில் ஓபிஎஸ் பக்கமிருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மருது அழகுராஜ் என ஒவ்வொருவராக திமுக-வில் ஐக்கியமானார்கள். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். கடைசியாக, அவரால் ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தர்மரும் அதிமுக-வில் இணைந்துவிட்டார்.
ஓபிஎஸ் தூது
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தேர்தலில் தனிக் கட்சி துவங்குவது அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன். தேவை இல்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம்.
டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நினைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாரா?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.












Click it and Unblock the Notifications