புது கட்சி பணிகளை தொடங்கிய ஓபிஎஸ்.. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஓபிஎஸ் மகன்.. என்ன நடக்கிறது?
சென்னை: தவெகவுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே டிசம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனிக்கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், ரவீந்திரநாத் செயல்பாடுகள் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் இனி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக செயல்படும் என்று அறிவித்த ஓபிஎஸ், டிசம்பர் 15ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிட போவதாகவும் கூறியுள்ளார். இதனால் ஓபிஎஸ் புதியக் கட்சியை தொடங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஓபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் சில மறைமுக சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. அதாவது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டு தங்களின் கருத்துக்களை கூற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் புதியக் கட்சி தொடங்கலாமா, கட்சித் தொடங்கினால் யாருடன் கூட்டணி அமைக்கலாம், என்டிஏ அல்லது தவெக அல்லது திமுக உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன.
அதில் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும், சிலர் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் கட்டாயம் சில எம்எல்ஏ-க்களை பெற முடியும் என்றும், சிலர் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் ஓபிஎஸ் தரப்பில் புதியக் கட்சி தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கட்சிக்கான பெயர், கொடி உள்ளிட்ட பணிகள் 90 சதவிகிதம் வரை நிறைவடைந்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் தவெகவுடன் சில மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. தவெக தொடங்கப்பட்ட போதே ரவீந்திரநாத் விஜய்யை சந்திக்க முயற்சிப்பதாக சில தகவல் வெளியாகியது. ரவீந்திரநாத்தின் முடிவுக்கு பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஓபிஎஸ் புதியக் கட்சியை தொடங்கினால், தவெக உடன் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் புதியக் கட்சியை தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைத்தால், அது அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறும். சில தொகுதிகளில் திமுகவுக்கு சவாலாக அமையும். இதனால் ஓபிஎஸ்ஸின் அரசியல் நகர்வுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications