திருப்பூரில் மோடியுடன் அந்த ‘மூவரணி’யை கை கோர்க்க வைக்க படாதபாடு படும் அண்ணாமலை- சிக்னல் வீக்காம்!
சென்னை: தமிழ்நாட்டுக்கு 2 மாதத்தில் 3-வது முறையாக வருகை தரும் பிரதமர் மோடியின் மேடையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா ஆகிய 3 பேரையும் கை கோர்க்க வைக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். ஆனால் இந்த 3 பேரிடம் இருந்தும் இன்னமும் சரியான சிக்னல் கிடைக்காததால் அண்ணாமலை தவித்து கொண்டிருக்கிறாராம்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 2 மாதங்களில் 3-வது முறையாக பிப்ரவரி 18-ந் தேதி வருகை தர உள்ளார். ஏற்கனவே திருச்சி, சென்னை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் விசிட் அடித்த மோடி இம்முறை பாஜக பலமாக இருக்கும் என நம்புகிற திருப்பூர் பல்லடத்துக்கு வருகை தருகிறாராம். அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியை மாநாடு போல நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் கொங்கு பெல்ட்டின் ஓய்வில் இருக்கும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களை கட்சி மாற வைத்து பாஜகவில் இணைந்துவிட்டார்கள் என பிரசாரம் செய்ய முயற்சிகள் நடைபெறுகிறதாம். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் கூட இப்போது உறுதியான முடிவை சொல்லாமல் தட்டி கழித்து வருகின்றன. அந்த கட்சிகளின் தலைவர்களையும் எப்படியாவது பல்லடம் மாநாட்டு மேடையில் ஏற்றிவிட வேண்டும் என பேச்சுவார்த்தை ஜரூராக நடைபெறுகிறாம்.
இந்த முயற்சிகளுக்கு அப்பால் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய மூவரையும் ஒரு சேர மோடியுடன் கை கோர்க்க வைக்கலாம் என பகீரத முயற்சி ஒன்றும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறதாம். ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை எப்ப அழைப்பு வரும் என இலவு காத்த கிளியாக இருப்பதால் சிக்கல் எதுவும் இல்லை. ஆனால் சசிகலாவோ, அதிமுக தமது வசம் வருவதற்கான உறுதியான நடவடிக்கையை டெல்லி எடுக்காத கோபத்தில் இணக்கமாக போவதற்கும் மேடை ஏறுவதற்கும் சிக்னல் கொடுக்கவில்லையாம். டிடிவி தினகரனும் ஆகட்டும் பார்க்கலாமே என்கிற ரேஞ்சில் பிடி கொடுக்காமலேயே இருந்து வருகிறாராம். ஆனாலும் விடாது கறுப்பாய் சசிகலா, தினகரன் தரப்புடன் அண்ணாமலை தரப்பு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications