திடீர் ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ்.. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு சென்னைக்கு வரல.. திமுக தான் காரணமா?
சென்னை: வழக்கமாக ஜெயலலிதா பிறந்தநாளன்று, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், நாளை சென்னை வர இருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார் ஓபிஎஸ். இதனால் அவர் வெகுவிரைவில் திமுகவில் ஐக்கியமாக உள்ளார் என்ற பேச்சு தீவிரமாக எழுந்துள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசினார். ஸ்டாலின் - ஓபிஎஸ் சந்திப்பை அடுத்து ஓபிஎஸ் திமுகவில் இணைய இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரை விட்டு விலகிய நிலையில் ஓரிரு நாட்களில் ஓபிஎஸ் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிகார யுத்தம் நடத்திய நிலையில், சட்ட ரீதியாகவும், கட்சியிலும் அவர் பின்னடைவைச் சந்தித்தார். எனினும், பாஜகவை முழுமையாக நம்பி இருந்தார். எப்படியும் அதிமுகவில் இணைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் பாஜக, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைத்து, ஓபிஎஸ்ஸை கைவிட்டது.
சட்டசபை தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் திமுகவுக்கு சென்றனர். கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தவெகவுக்கு சென்றனர். தர்மர் எம்.பி எடப்பாடி பழனிசாமியுடனே சென்று சேர்ந்துவிட்டார். பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ. பன்னீர்செல்வத்தின் அத்தியாயம் முடிந்துவிட்டது எனக் கூறி புதுக்கட்சி தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் தான் வேறு வழியின்றி, ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை உறுதி செய்யும் வகையில் அண்மையில், முதலமைசர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை தனது மகன் ரவீந்திரநாத் உடன் சென்று சந்தித்துப் பேசினார் ஓபிஎஸ். ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ அய்யப்பன், சட்டசபையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பேசினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தாள் விழாவில் கலந்துகொள்கிறார். மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் முழு உருவச் சிலைக்கு, மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி கடந்த 19-ம் தேதி ஓ.பன்னீர் செல்வம், ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில், ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளில் அவருடைய முழு உருவ சிலைக்கு மாலை, அணிவித்து மரியாதை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம், நாளை சென்னையில் ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அவர் வெளியிட்டிருந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டு புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. போடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில், ஜெயலலிதாவின் படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்துவார் என்று அறிகவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்ஸின் இந்த முடிவு, அவர் விரைவில் திமுகவில் இணைய இருப்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் நெருங்கும் சூழலில் அவர் விரைவில் திமுகவில் இணைய இருப்பதால் தான், ஜெயலலிதா சிலைக்கு பெரிய அளவில் மரியாதை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications