புத்தி தடுமாற்றத்தில் எடப்பாடி.. ஜெயலலிதாவுக்கே துரோகம்..! புது குண்டை போடும் பெங்களூர் புகழேந்தி
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட திட்டம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாகத் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு அளித்தது.
அதில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை ஐகோர்ட், கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உத்தரவிட்டனர்.

பெங்களூர் புகழேந்தி
இது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் ஓபிஎஸ் தரப்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி, "முன்பு தனி நீதிபதி அளித்த 75 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பிலேயே அனைத்தும் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேல்முறையீடு
பொதுக்குழுவைக் கூட்ட எடுத்த முடிவு தவறு எனத் தனி நீதிபதி மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளன. தீர்ப்பில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி மேல்முறையீடு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். கட்சி பிரச்சினைகள் என்றாலும் கூட, அவையும் நீதிமன்றங்களுக்குக் கட்டுப்பட்டது தான் எனத் தேர்தல் ஆணையமே கூறி உள்ளது.

புத்தி தடுமாற்றம்
இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் சென்றால்தான் கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தில் நிச்சயம் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு தான் கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி புத்தி தடுமாற்றத்தில் உள்ளார். அவருக்குத் தெரியவில்லை என்றால் உடன் இருக்கும் செம்மலையாவது எடுத்துக் கூற வேண்டும். பொதுச்செயலாளர் பதவி பெற வேண்டும் எனப் பல ஆண்டுகளாகத் திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துள்ளார். இதற்கெல்லாம் செம்மலையும் உறுதுணையாக உள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது" என்றார்.

எடப்பாடி மீது தாக்கு
தொண்டர்கள் ஒற்றை தலைமையை விரும்புவதாக எடப்பாடி கூறுவது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திலும் தொண்டர்களைச் சந்திக்கவில்லை. அவர் எங்கும் சென்று செயல் வீரர்கள் கூட்டம், அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தி பொதுச் செயலாளராக ஆக ஆதரவு கேட்கவில்லை. எனவே தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாகக் கூறுவதில் இல்லை. அவருக்குத் தொண்டர் ஆதரவு எதுவும் இல்லை.

சாதாரண தொண்டர்
உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி சட்டசபைத் தேர்தல் எனப் பல தேர்தல்களில் அதிமுக தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து உள்ளது. ஓபிஎஸ் எந்த நேரத்திலும் ஒற்றை தலைமையில் நான் தான் இருக்க வேண்டும் எனச் சொன்னது இல்லை. சாதாரண நபரை ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுத்தாலும் ஓபிஎஸ் அதை ஏற்றுக் கொள்வர். ஆனால், எடப்பாடி பழனிசாமி சாதாரண தொண்டரைத் தேர்ந்தெடுப்பாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

சசிகலா
தொடர்ந்து சசிகலா உடன் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு என்று ஓபிஎஸ் தெளிவாகத் தெரிவித்தார். அனைவரும் இணைய வேண்டும் என்றால், வெளியே சென்ற அனைவருடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம் என்றே அர்த்தம்" என்றார்.












Click it and Unblock the Notifications