ஜெயலலிதாவின் சாதிப்பெயரை சொல்லி கொச்சையா பேசினார்.. கே.பி.முனுசாமி மீது ‘பகீர்’ குற்றச்சாட்டு!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஈபிஎஸ் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் சாதி பற்றி கொச்சையாகப் பேசியதாக 'பகீர்' குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாகச் சாடிப் பேசியிருந்தார். ஓபிஎஸ் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என விமர்சித்திருந்தார்.
முனுசாமியின் இந்தப் பேச்சு ஓபிஎஸ் ஆதரவாளர்களை கொதிக்கச் செய்தது. தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனுசாமி பற்றி குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கே.பி.முனுசாமி பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சுயநலவாதி முனுசாமி
செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சுயநலவாதி கே.பி.முனுசாமிக்கு எம்.பி சீட் கொடுத்தார்கள். ஜெயிக்க முடியவில்லை. அதோடு விட்டிருக்கலாம். ராஜ்யசபா சீட் வாங்கினார். அப்போதும் போதாமல், எம்.எல்.ஏ சீட்டும் பெறுகிறார். எம்.எல்.ஏ ஆனால் அமைச்சராகி விடலாம் என்று நினைத்தார். ஆட்சி பறிபோனதும், எம்.எல்.ஏவா, எம்.பியா எனக் கேள்வி எழுந்தபோது எம்.பி சீட்டை ராஜினாமா செய்தார். உயர்ந்த பதவியை வீணடித்துவிட்டார். அவர் ஓபிஎஸ் பற்றி விமர்சிக்க தகுதியே இல்லை.

அடையாளம் காட்டிய ஓபிஎஸ்
கே.பி.முனுசாமி நல்லவரே கிடையாது. வாயில் ஒன்று பேசுவார். செயலில் வேறொன்றைச் செய்வார். அதனால் தான் இவரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஜெயலலிதாவிற்குப் பிறகு முனுசாமியை அடையாளம் காட்டியதே ஓபிஎஸ் தான். இன்று கட்சியில் கே.பி.முனுசாமி இருக்கிறார் என்றால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தான் காரணம். அவரை துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்க கடும் எதிர்ப்பு இருந்தது. அதையும் மீறி போராடி பதவி பெற்றுக் கொடுத்தார்.

நம்பி மோசம் போய்டாதீங்க
ஜெயலலிதா இருந்த பதவி வேறு யாருக்கும் இல்லை எனக் கூறிவிட்டு இன்று துணை பொதுச் செயலாளர் பதவியில் இருக்கிறார். அடுத்து எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டிவிட்டு அவர் இடத்திற்கும் வருவார். எடப்பாடி பழனிசாமி முனுசாமி பற்றி புரிந்துகொள்ளவேண்டும். அவர் நேரில் பேசுவதை நம்பி, வீணாகிவிடாதீர்கள். கே.பி.முனுசாமியின் சுயரூபம் அனைவருக்கும் தெரிய வேண்டும்.
|
ஜெயலலிதா சாதி பற்றி பேசினார்
ஜெ.தீபா கட்சிக்கு வந்தபோது, ஏற்கனவே ஒரு பாப்பாத்தி இப்போது இன்னொரு பாப்பாத்தியா கட்சியை கெடுக்குறதுக்கு என கே.பி.முனுசாமி ஜெயலலிதாவின் சாதிப்பெயரை சொல்லி மிகவும் கொச்சையாக என்னிடம் பேசினார். இதை அதிமுக தொண்டன் கேட்டால் என்ன ஆகும்? ஆனால் இதுவரை கட்சியின் நலன் கருதி அதை நான் சொல்லாமல் இருந்தேன். தற்போது எடப்பாடி அவர் ஓபிஎஸ் குறித்து அநாகரிகமாக பேசிவிட்டார். அதனால்தான் இதையெல்லாம் நான் கூறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications