என்ன எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்தே செல்லாதா? “இதற்கு மேலும் பொறுக்கலாமா?” வெகுண்டெழுந்த ஓபிஎஸ் டீம்!
சென்னை : எம்ஜிஆர், ஜெயலலிதா வழங்கிய அதிமுக உறுப்பினர் அட்டைகள் செல்லாது, எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கே பதவிகளும், தேர்தலில் சீட்டும் கிடைக்கும் என முன்னாள் எம்.எல்.ஏ பேசியதற்கு ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் வெகுண்டெழுந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெசிய முன்னாள் எம்எல்ஏவும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தூசி மோகன் பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியது.

எடப்பாடி அணி எம்.எல்.ஏ : அதிமுக மாஜி எம்.எல்.ஏ தூசி மோகன் பேசுகையில், "அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பதவி வகித்து வந்தார்கள். தற்போது பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டைகள் வைத்திருந்தால் தற்போது அந்த உறுப்பினர் அட்டைகள் செல்லாது. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பதவி கிடைக்கும்.
எதிர்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள் எம்எல்ஏ, எம்பி உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டை வைத்திருப்பது அவசியம். அதனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் அனைவரும் மீண்டும் உறுப்பினர்களாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும்" என்று பேசியிருந்தார் தூசி மோகன்.
பயங்கர ஷாக் : எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழங்கிய உறுப்பினர் அட்டை செல்லாது, எடப்பாடி பழனிசாமி கையெழுத்து போட்ட உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் தான் கட்சியில் பதவி, தேர்தலில் சீட் கிடைக்கும் என்று தூசி மோகன் பேசி இருப்பது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்நிலையில், இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு, "இதற்கு மேலும் பொறுக்கலாமா? திருச்சி அழைக்குது புறப்படலாமா?" என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெற இருக்கிறது. எம்ஜிஆர் பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுகவின் 51-வது ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது ஓபிஎஸ் அணி.












Click it and Unblock the Notifications