கொங்கு சீனியர் பெருசா பிளான் பண்ணிட்டாரு.. ‘சிக்னல்’ ஈபிஎஸ்க்கு குடைச்சல்- பற்றவைக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சாதி ரீதியாகப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்குப் பின்னணியில் பல 'கணக்குகள்' இருக்கலாம் எனப் பற்ற வைக்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தான் முதலமைச்சராக வர முடியும் என்ற பொருளில் பேசியது அதிமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
செங்கோட்டையனின் இந்தப் பேச்சு கடும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாக பதறியடித்து விளக்கம் கொடுத்தார் செங்கோட்டையன்.
ஆனால், செங்கோட்டையன் இப்படியெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசக்கூடியவர் அல்ல என்றும், அவரது பேச்சுக்குப் பின்னால் சில திட்டங்கள் இருக்கலாம் என்றும் கொளுத்திப் போடுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

ஒரே ‘சாதி’ - செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சாதி குறித்து வெளிப்படையாக பேசினார். அதில், "நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் தான். அடுத்து எங்கள் சாதியை சேர்ந்தவர் தான் முதல்வராக முடியும். ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும்.. இரண்டு கத்திகள் இருக்க முடியாது." என்று பேசினார். இவரது இந்த சாதி ரீதியான பேச்சு பெரும் சர்ச்சையானது. இந்த பேச்சை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வெடித்த பூகம்பம்
செங்கோட்டையனின் பேச்சு கட்சிக்குள் ஜாதி ரீதியிலான பிளவு இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஓ.பன்னீர்செல்வம் தான் முக்குலத்தோர் சாதியைச் சேர்ந்த நிர்வாகிகளை, சாதி பாசத்தால் வளைக்க நினைக்கிறார் என ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியிலும் சாதி பூகம்பம் கிளம்பியது, அந்த அணியில் இருக்கும் மற்ற சமூகங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது அதிமுகவுக்குள் லேசான குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.

ஈபிஎஸ் சாதி வெறியாம்
செங்கோட்டையனின் இந்தப் பேச்சை கெட்டியாக பிடித்துக்கொண்ட ஓபிஎஸ் தரப்பினர் சாதி ரீதியாக கட்சியை கொண்டு செல்வதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை விமர்சித்து வருகின்றனர். அதிமுகவில் மூத்த தலைவராக இருப்பவர் சாதி அடிப்படையில் பேசியது வெட்கக்கேடானது என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் உள்ளிட்டவர்கள் விமர்சித்தனர். எடப்பாடி பழனிச்சாமி சாதிய வெறியோடு நடந்து கொள்கிறார், அதன் வெளிப்பாடு தான் செங்கோட்டையனின் பேச்சு என்றும் அவர்கள் விமர்சித்தனர்.

செங்கோட்டையன் கணக்கு போட்டுட்டார்
மேலும், ஓபிஎஸ் தரப்பினர் வேறு சில வெடிகளையும் வீசுகிறார்கள். அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் செங்கோட்டையன். போகிறபோக்கில் தவறுதலாக வார்த்தைகளை விடக்கூடியவர் அல்ல. அவரது இந்தப் பேச்சுக்கு பின்னணியில் பெரிய திட்டம் இருக்கலாம் எனக் கூறி குட்டையைக் குழப்புகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர். எடப்பாடி பழனிசாமியின் சாதியைச் சேர்ந்தவன் நான் எனச் சொல்வதன் மூலம், அடுத்து ஈபிஎஸ்ஸுக்கு ஏதாவது சிக்கல் என்றால் தான் தான் தலைமைப் பதவிக்கு வருவேன் என்பதை சூசகமாக தெரிவிக்க விரும்புகிறார் என பரபரப்பைப் பற்ற வைக்கிறார்கள்.

குடைச்சல் கொடுக்க திட்டம்
ஓபிஎஸ் தரப்பிலேயே இருக்கும் வேறு சிலரோ, செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பல ஆண்டுகளாகவே உரசல் இருந்து வருகிறது. சீனியரான தன்னை பின்னுக்குத் தள்ளி எடப்பாடி பழனிசாமி முன்னணிக்கு வந்ததை செங்கோட்டையன் ரசிக்கவில்லை, அதனால் தான் அந்த அணியில் இருந்தாலும் பட்டும் படாமலும் பேசி ஒதுங்கிக் கொள்கிறார். இப்போது சாதி ரீதியாகப் பேசி இருப்பதன் மூலம் மற்ற சாதிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, எடப்பாடி பழனிசாமிக்கு குடைச்சல் கொடுக்க திட்டமிட்டிருக்கலாம் என்கிறார்கள்.

சிக்கலோடு சிக்கல்
செங்கோட்டையனின் திட்டமிட்டுப் பேசினாரோ, அல்லது தவறுதலாகப் பேசிவிட்டாரோ, எப்படி இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இதுவும் ஒரு சிக்கலாக அமைந்துவிட்டது. அவரது அணியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் செங்கோட்டையனின் பேச்சை சீரியசாக எடுத்துக் கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணிக்குள் குழப்பம் வரலாம் என்று கூறப்படுகிறது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என ஓபிஎஸ் குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், டீமுக்குள்ளேயே எழுந்த சர்ச்சையால் அப்செட் ஆனது மட்டும் உண்மை.

என்ன நடக்குமோ?
ஏற்கனவே சி.வி.சண்முகம், சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்களை தனது கையில் வைத்திருக்கிறார், வேலுமணி, கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்களை தன் கையில் வைத்திருக்கிறார் என ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த பொன்னையன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, பொன்னையனை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சீனியர்கள் ஓரங்கட்டிவிட்டனர். இந்நிலையில், செங்கோட்டையனின் பேச்சு என்ன விளைவுகளை ஏற்படுத்தக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications