இந்துத்துவா கொள்கை.. மத்திய அரசை தவறாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது..அமெரிக்காவில் ஜெய்சங்கர் பேச்சு
சென்னை: மத்திய அரசை சர்வதேச அளவில் தவறாக சித்தரிக்கும் முயற்சிகள் நடப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்துத்துவா கொள்கை குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் இப்படி பதில் அளித்தார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்க அதிபராக பிடன் பதவி ஏற்றபின் ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் நீண்ட பயணம் இதுதான். கொரோனா வேக்சின் தொடங்கி எல்லை பாதுகாப்பு வரை பல விஷயங்களை இதில் ஜெய்சங்கர் ஆலோசனை செய்ய உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஹூவர் நிறுவனத்தின் கருத்தரங்கில், பேசிய அவரிடம் மத்திய அரசின் இந்துத்துவா கொள்கை குறித்து மெக்மாஸ்டர் கேள்வி எழுப்பினார்.

கேள்வி
இந்திய மத்திய அரசு தீவிர இந்துத்துவா கொள்கையை பின்பற்றுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், மத்திய அரசை சர்வதேச அளவில் வேறு வழியில் சித்தரிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. மத்திய அரசு தோற்றம் வெளியில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் உண்மையான ஆட்சி முறை வேறு மாதிரியானது.

ஆட்சிமுறை
மத்திய அரசின் உண்மையான நிர்வாகம் வேறு மாதிரியானது. இந்தியாவும், இந்திய மக்களும் எப்போதும் ஜனநாயகத்தை மதிக்க கூடியவர்கள். ஜனநாயகத்தை தவிர்த்து வேறு அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு முன் மக்களின் மதம், இனம், அடையாளம் சார்பாக வாக்கு அரசியல் நடந்து கொண்டு இருந்தது. நாங்கள் அதில் இருந்து விலகி வந்து இருக்கிறோம்.

நம்பிக்கை
இந்தியா பல மதங்களின், பல நம்பிக்கைகளின் தொகுப்பு. உலகம் முழுக்க உள்ள பல நம்பிக்கைகளுடன் இந்தியா நெருங்கிய தொடர்பு கொண்டது. இந்தியா மதச்சார்பின்மை கொண்ட நாடு. மதச்சார்பின்மை என்றால் ஒரு மதத்தை இகழ்வது இல்லை, எல்லா மதத்தையும் சமமாக மதிப்பது ஆகும். இந்தியாவின் ஜனநாயம் தற்போது செழித்துக் கொண்டு இருக்கிறது.

அரசியல்
அரசியலில் எல்லா தரப்பிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொது வாழ்வில் மக்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தற்போது இந்தியாவில் தங்கள் பின்னணி மீது, கலாச்சாரம் மீது, மொழி மீதும் அதிக பற்று மற்றும் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். இந்த விஷயத்தை உலக நாடுகள் சில தவறாக புரிந்து கொள்கின்றன.

ஒற்றுமை
இந்தியா பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை மதிக்கிறது. இந்தியா ஜனநாயக கொள்கை கொண்ட அரசு. இதனால்தான் பல்வேறு கலாச்சாரங்கள் பாதுகாப்பாக உணர முடிகிறது. அனைத்து பின்னணி கொண்ட மக்களும் இந்தியாவில் பாதுகாப்பாக உணர, முன்னேற்றம் அடைய தற்போது உள்ள அரசு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரிக்கிறது.

கொரோனா
இரண்டாம் அலை மோசமாக உள்ளது. இந்தியா கடினமான காலத்தை சந்தித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசு அதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. மக்களுக்கு போதிய உதவியும், இலவச உணவும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல கோடி மக்கள் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் இந்தியாவில் பலன் பெற்றுள்ளனர், என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications