ஒட்டுமொத்த தேசமும் ராம மயத்தில் திளைப்பது இந்தியருக்கு வரலாற்றுப் பூர்வ தருணம்: ஆளுநர் ரவி பெருமிதம்
சென்னை: ஒட்டுமொத்த தேசமும் ராம மயத்தில் திளைப்பது இந்தியருக்கு வரலாற்றுப் பூர்வ தருணம் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ராமேஸ்வரம், மதுரை பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று திருச்சி மாவட்டத்துக்கு வருகை தந்தார். பின்னர் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார். ஶ்ரீரங்கம் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் ஆளுநர் ரவி.

இது தொடர்பாக ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: "பிரபு ஸ்ரீ ராமரின் எண்ணற்ற பக்தர்களுடன் அனைவரது நலனுக்காக ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி கோயிலில் வேண்டிக்கொண்டேன். கோயில் வளாகத்தில் தூய்மை சேவையில் ஈடுபட்டேன். பகவானிடம் முதல் முறையாக வழங்கப்பட்ட வால்மீகியின் ஆதி சமஸ்கிருத ராமாயணத்துக்குப் பிறகு ஸ்ரீ ராமரின் மிகச்சிறந்த பக்தர், அறிஞர் மற்றும் புலவரான கம்பர் தமிழில் ராமாயாணத்தை அரங்கேற்றய கம்பர் மணி மண்டபத்தில் ஸ்ரீ ராம பக்தியின் ஆழத்தை அனுபவித்தேன். இவ்வாறு ஒட்டுமொத்த தேசமும் ராமமயத்தில் திளைப்பது ஒவ்வோர் இந்தியருக்கும் வரலாற்றுபூர்வ தருணமாகும்." இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக மதுரை பயணம் தொடர்பாக "மதுரையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரின் அருளாசியை பெற்றேன். ஒரே குடும்பம் போல எண்ணற்ற பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோயிலில் இருந்தது அங்கிருந்த ஒட்டுமொத்த சூழலின் அசாதாரண ஆன்மிக ஆற்றலை பலப்படுத்தியது. இந்த ஆற்றல் பன்மடங்காகப் பெருகி, பாரதத்தை அதன் மேன்மையை நோக்கி அழைத்துச் செல்லும்" எனவும் ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார்.
“பிரபு ஸ்ரீ ராமரின் எண்ணற்ற பக்தர்களுடன் அனைவரது நலனுக்காக ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதசுவாமி கோயிலில் வேண்டிக்கொண்டேன். கோயில் வளாகத்தில் தூய்மை சேவையில் ஈடுபட்டேன். பகவானிடம் முதல் முறையாக வழங்கப்பட்ட வால்மீகியின் ஆதி சமஸ்கிருத ராமாயணத்துக்குப் பிறகு ஸ்ரீ ராமரின் மிகச்சிறந்த… pic.twitter.com/fAgc5RJR2y
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 17, 2024
மேலும் ராமநாதபுரத்தில் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆளுநர் ரவியை சந்தித்தனர். தென் தமிழகத்தில், குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் மற்றும் பேரழிவுகளின் போது, நமது மீனவர்கள், பெரும்பாலும் தங்கள் உயிரை பணயம் வைத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மகத்தான பங்களிப்பைச் செய்தனர். மீனவர் சமுதாயத்தை நினைத்து நாம் எப்போதும் பெருமைப்படுவோம் என இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் ரவி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications