Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்து வாங்குது.. 97 லட்சம் பேரை தூக்கிய SIR! சிறப்பு முகாம்களில் வந்ததோ வெறும் 39,000 விண்ணப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (Special Intensive Revision - SIR) மூலம் மிகப்பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் மட்டும் 97.37 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பட்டியலில் சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், 39,000 பேர் மட்டுமெ மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்படுத்தியது. முதற்கட்டமாக பீகார் மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாக, அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. தேர்தலுக்கு முன்பு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

Voter list Tamil Nadu SIR

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல்

இருப்பினும், தேர்தல் ஆணையம் இதனை இரண்டாம் கட்டமாக மேலும் பல மாநிலங்களுக்கு விரிவுபடுத்துவதாக அறிவித்தது. அதன்படி, தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலும் இந்த எஸ்ஐஆர் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த அறிவிப்பு வெளியானதுமே திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோன்று பல அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

சிறப்பு தீவிர திருத்தம்

இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டது. இந்த பணியின் ஒரு பகுதியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களிடம் கணக்கீட்டு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து திரும்ப பெற்றனர். முதலில் டிசம்பர் 4ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அதை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பின்னர், மீண்டும் ஒரு முறை கால அவகாசம் டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

எஸ்ஐஆர் வாக்காளர் நீக்கம்

தேர்தல் ஆணையம் இரண்டு முறை காலக்கெடு நீட்டித்த பிறகும், தமிழ்நாட்டில் 100 சதவீதம் படிவங்கள் வழங்கப்பட்டு, பெரும்பாலான படிவங்கள் திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் படிவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளது. இதில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 4,19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதே நேரத்தில், 97,37,832 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 15.18 சதவீதம் ஆகும்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்தின் விளக்கப்படி, நீக்கப்பட்டவர்களில் சுமார் 26.94 லட்சம் பேர் இறந்தவர்கள், சுமார் 66 லட்சம் பேர் இடம் பெயர்ந்தவர்கள், மேலும் சுமார் 3.39 லட்சம் பேர் இரட்டை வாக்காளர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று வகைகளை சேர்த்தால், நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 75 லட்சம் ஆகும். இருப்பினும், தங்கள் பெயர் தவறாக நீக்கப்பட்டதாக கருதும் வாக்காளர்கள், மீண்டும் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

படிவம் 6 விண்ணப்பம்

இதற்காக படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான இறுதி நாள் ஜனவரி 18, 2026 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை போர்ட்டல் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

மக்களிடம் ஆர்வமில்லை

ஆனால், இத்தனை முயற்சிகளுக்கும் பிறகும், இதுவரை சுமார் 39 ஆயிரம் பேர் மட்டுமே தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீக்கப்பட்ட 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை மிக மிக குறைவானதாகும். மேலும், "என் பெயர் தவறாக சேக்கப்பட்டுள்ளது" என கூறி வரும், பெயர் நீக்க விண்ணப்பங்கள் ஆயிரம் கூட வரவில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலை, பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைவா, அல்லது நடைமுறை சிக்கல்களா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+