சொந்த வீடா? வாடகை வீடா? எது பெஸ்ட்? குழப்பமே வேண்டாம்! தெளிய வைக்கும் பொருளாதார நிபுணர்
சென்னை: சொந்த வீடு கட்டுவது என்பது பலரது கனவு! அதிலும் மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் சொந்த வீடு வாங்குவது பலரது லட்சியமாகவே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கலாமா, இல்லை வாடகை வீட்டிலேயே இருக்கலாமா என சிலருக்கு ஒரு குழப்பம் இருக்கும். எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.
எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். கடனை வாங்கி வீடு கட்டினால் அதற்கு இஎம்ஐ கட்ட வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து நாம் கட்டிய தொகை வீட்டின் விலையிலிருந்து பல மடங்கு அதிகரித்திருக்கும், அப்படியிருக்கும் போது நாம் மொத்தமாக செலுத்திய தொகைக்கு அந்த வீட்டின் மதிப்பு இருக்குமா என்ற கேள்வியும் சிலருக்கு இருக்கும்.

இதுகுறித்து பொருளாதார நிபுணர் கிஷோர் குமார் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சொந்த வீடு வாங்குவதா, வாடகை வீடு வாங்குவதா? எது சிறந்தது என யோசிப்பார்கள். ஒரு சிலர் சொந்த வீடு போல் வருமா என உணர்ச்சி பொங்க கேட்பார்கள். ஆயிரம் இருந்தாலும் கனவு இல்லம் அது!
இல்லை சொந்த வீடு வாங்குவது நஷ்டம்தான். அதற்கு வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம் என மற்றொரு தரப்பு சொல்கிறது. நிறைய பொருளாதார நிபுணர்களும் வாடகை வீடுதான் பெஸ்ட் என்பார்கள். அப்படியிருக்கும் போது நாங்கள் கடைசி வரை வாடகை வீட்டில்தான் இருக்க வேண்டுமா? என கேட்பார்கள்.
உதாரணமாக ஒருவர் 50 லட்சம் ரூபாய்க்கு அபார்ட்மென்ட் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். முன்பணம் 20 சதவீதம் அதாவது ரூ 10 லட்சத்தை செலுத்த வேண்டும். மீதமுள்ள 80 சதவீதமான 40 லட்சம் ரூபாயை வங்கியில் கடன் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். இதற்கு மாத தவணை ரூ 32,209 கட்ட வேண்டியிருக்கும். அதற்கு சராசரியாக ஆண்டுக்கு வட்டி 8.50 சதவீதம் என வைத்துக் கொள்வோம்.
இந்த மாத தவணை குறைவுதான் என்றால் ஒரு 25 ஆண்டுகளுக்கு லோன் போட்டால் நீங்கள் மொத்தம் எவ்வளவு தொகை கட்டியிருப்பீர்கள் என பார்க்கலாம். அதில் இஎம்ஐ மட்டும் ரூ 96,62,700, வட்டி மட்டும் ரூ 56,62,731 கட்டி இருப்பீர்கள். பிறகு நீங்கள் போட்ட 10 லட்சம் தொகையுடன் சேர்த்தால் 25 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டுக்கு மதிப்பு என்பது 1,22,37,888 ரூபாய் ஆகும்.
நீங்கள் 25 ஆண்டுகள் கழித்து ரூ.1,06,62,700 கட்டியிருப்பீர்கள். நீங்கள் வாங்கிய வீட்டிற்கு அப்போதைய மதிப்பை பார்த்தால் உங்களுக்கு வெறும் ரூ 15,75,188 தான் லாபமாக இருக்கும். நீங்கள் சொல்லலாம் அன்று நாங்கள் ரூ 2 லட்சத்திற்கு வாங்கினோம். இன்று அதன் மதிப்பு 10 லட்சம் என! ஒரு 10 லட்சம் ரூபாய் வீடு 50 லட்சத்திற்கு விற்பனையானால் அது ஓகே.
ஆனால் 10 லட்சம் ரூபாய் வீடு ரூ 2 கோடிக்கு விற்பனையானால் சில ஆண்டுகளுக்கு பிறகு அது 8 கோடி ஆகும் என சொல்ல முடியாது. அப்போது ரூ 8 கோடி கொடுத்து யார் வாங்குவார்கள் என்று பார்க்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மளமளவென ஏறுவது போல் இருக்கும். ஆனால் 10 வருஷம் கழித்து வேகமாக ஏறுமா என்றால் ஏறாது. எனவே சராசரியைதான் கணக்கிட முடியும். அந்த வகையில் பார்த்தால் ஆண்டுக்கு நீங்கள் வாங்கிய வீட்டின் விலையில் 3.8 சதவீதம் மட்டுமே மதிப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications